மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விராட் கோலி மிகப்பெரிய பிரச்சினை ஒன்றில் சிக்கி இருக்கிறார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் 19 வயது வீரரான சாம் கோன்ஸ்டாஸ் அறிமுகமாகி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 52 பந்துகளில் எல்லாம் அவர் அரைசதம் அடித்தார். இந்த சூழலில் விராட் கோலி ஓவரின் நடுவே வேண்டுமென்று பந்தை எடுத்து வந்து கோன்ஸ்டாஸ் உடன் மோதினார். இது தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலி எப்படி நடந்து வருகிறார் என்று பாருங்கள். விராட் கோலி வேண்டுமென்று மைதானத்தில் ஒரு இடத்தில் இருந்து நகர்ந்து வந்து அவர்தான் இந்த மோதலை ஆரம்பிக்கிறார்.
இதில் விராட் கோலி மீது தான் தவறு இருக்கிறது. இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதனை ஐசிசி உற்று நோக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், கோன்ஸ்டாஸ் அவர் வழியில் அவர் நடந்து தான் சென்று கொண்டிருந்தார். விராட் கோலி தான் வேண்டுமென்றே கோன்ஸ்டாஸ் திசை நோக்கி வந்து அவரை மோதினார்.
விராட் கோலி ஒரு ஆல் டைம் சிறந்த வீரர். அனுபவம் நிறைந்த நபர். இந்த போட்டி முடிந்தவுடன் நான் ஏன் இதை செய்தேன் என்று விராட் கோலி தனக்குள் கேள்வி கேட்டுக் கொள்வார். இந்த விஷயத்தில் போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று வாஹன் தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருக்கு போட்டியில் ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படும்.
இல்லையென்றால் ஒரு டெஸ்ட் போட்டியில் தடை விதிக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது. இதனிடையே விராட் கோலியின் இந்த செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் இதுபோல் நிறைய செய்திருக்கிறார்கள். அதற்கு கோலி பதிலடிதான் கொடுத்திருக்கிறார் என்று ஒரு தரப்பினரும், இன்னொரு தரப்பினர் 19 வயது வீரரிடம் விராட் கோலி இப்படி நடந்திருக்கக் கூடாது என்றும் விசாரித்து வருகிறார்கள்.