பிரிஸ்பேன்: இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பின் அபார ஆட்டத்தால் சீனியர் வீரரான விராட் கோலி மிரண்டுபோன சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபாலோ ஆனை தவிர்த்த 2வது பந்திலேயே ஆகாஷ் தீப் சிக்சர் அடித்ததை ஓய்வறையில் இருந்து பார்த்து, விராட் கோலி சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்த நிலையில், இந்திய அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

ஏனென்றால் ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி 246 ரன்களை சேர்க்க வேண்டும். இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோரின் அபார அரைசதத்தால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா அணியின் அபார பவுலிங்கால், 213 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அப்போது களத்தில் பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கடைசி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று தீவிரமாக இருந்தனர். ஆனால் கம்மின்ஸ் - ஸ்டார்க் இருவரும் எவ்வளவோ முயன்றும், இவர்களின் நிதானத்தை வீழ்த்த முடியவில்லை. பிட்ச் மற்றும் பந்திலும் எந்த உதவியும் கிடைக்காததால், ஸ்டார்க் அட்டாக்கில் இருந்து வெளியேறினார்.
இதன்பின் ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங் நிறுத்தி ஆகாஷ் தீப் விக்கெட்டை வீழ்த்த கம்மின்ஸ் முயற்சித்தார். இதனை பயன்படுத்தி கொண்ட ஆகாஷ் தீப், அந்த ஓவரிலேயே 7 ரன்களை எடுக்க, அதன்பின் அபாரமாக ஒரு பவுண்டரியை விளாசி இந்திய அணியை காப்பாற்றினார். இந்திய அணியின் ஃபாலோ ஆனை தவிர்த்த 2வது பந்திலேயே ஆகாஷ் தீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்சரை பறக்கவிட்டார்.
இதனை ஓய்வறையின் கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்த விராட் கோலி, சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கம்பீருடன் இணைந்து கொண்டாடி தீர்த்தார். சிறப்பாக ஆடிய ஆகாஷ் தீப் 4வது நாள் ஆட்டம் முடிவில் 31 பந்துகளில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 27 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். ஆகாஷ் தீப் விளையாடிய பேட் விராட் கோலி பரிசாக அளித்தது.
ஏற்கனவே வங்கதேச டெஸ்ட் தொடரில் அதே பேட்டில் ஆகாஷ் தீப் பேட்டிங் செய்து சில சிக்சர்களை விளாசினார். தற்போது அந்த பேட்டிலேயே இந்திய அணியை காப்பாற்றி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. நாளைய ஆட்டத்தில் இந்திய அணி கொஞ்சம் கவனமாக விளையாடினாலே எளிதாக டிரா செய்ய முடியும் என்று பார்க்கப்படுகிறது.