மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸை தோளில் இடித்து ஸ்லெட்ஜிங் செய்த சம்பவம் ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது. இதனால் விராட் கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், ஐபிஎல் தொடரின் போது மும்பை - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மிட்சல் ஸ்டார்க் மீது பொல்லார்ட் பேட்டை வீசிய சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டாஸ் இடையில் மோதல் ஏற்பட்டது. சாம் கோன்ஸ்டாஸ் மறுமுனைக்கு நடந்து சென்ற போது அவரை நோக்கி வந்த விராட் கோலி, வேண்டுமென்றே கோன்ஸ்டாஸின் தோளில் இடித்து ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.

இதனால் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேபோல் வர்ணனையில் இருந்த ஆஸ்திரேலியா ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங், மைக்கில் கிளார்க், ஜஸ்டிங் லாங்கர் உள்ளிட்ட பலரும் விராட் கோலியை ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்க வேண்டும் என்று கூற தொடங்கினர்.
ஸ்லெட்ஜிங்கில் பெயர் பெற்ற ஆஸ்திரேலியா அணியே விராட் கோலியை ஒரு போட்டியில் விளையாட தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பியது இந்திய ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரிக்கி பாண்டிங் எத்தனையோ முறை இளம் வீரர்களுடன் நேரடியாக வார்த்தை மோதலில் ஈடுபட்டு ஸ்லெட்ஜிங் செய்திருக்கிறார்.அவர் விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்தார், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்ணனை செய்தார்.
இதனால் விராட் கோலியை குறி வைத்து ஆஸ்திரேலியா விமர்சிப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் வாட்சனை இடித்த குற்றச்சாட்டில் கம்பீர் தடை கொடுக்கப்பட்டதை போல் விராட் கோலிக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஐசிசி தரப்பில் விராட் கோலி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தன. இதனால் ஐபிஎல் தொடரில் நடந்த மோதல்கள் மூலம் விராட் கோலிக்கு அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்படவே வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது.
ஏனென்றால் ஆர்சிபி அணிக்காக ஆடிய மிட்சல் ஸ்டார்க் மீது பேட்டை வீசிய மும்பை வீரர் பொல்லார்ட்-க்கு போட்டிக்கான ஊதியத்தில் 75 சதவிகிதம் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. அதேபோல் ஸ்ரீசாந்தை கன்னத்தை அறைந்த குற்றச்சாட்டில் ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு சீசனில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
ஆனால் விராட் கோலி செய்த சம்பவம் ஸ்லெட்ஜிங் குற்றச்சாட்டின் கீழ் மட்டும் வரும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் விராட் கோலிக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்றும், லெவல் 2 குற்றச்சாட்டு என்பதால் அவருக்கு வார்னிங் கொடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், விராட் கோலி ஸ்லெட்ஜிங் புகாரை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.