சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு விராட் கோலி செய்த ஒரு செயலை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பின் கோலி மைதானத்தை விட்டு வெளியேறிய போது ரசிகர் ஒருவர் தவறவிட்ட இந்திய தேசியக் கொடியை, குனிந்து எடுத்து அவரிடம் திருப்பிக் கொடுத்த நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரது இந்தச் செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. என்ன நடந்தது?
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் 'டக் அவுட்' ஆகி கடும் விமர்சனங்களைச் சந்தித்த விராட் கோலி, சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தனது கிளாசிக் ஆட்டத்திற்குத் திரும்பினார். அபாரமாக விளையாடிய அவர், 81 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலியின் இந்தச் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 0 - 3 என ஒயிட்வாஷ் ஆகும் அபாயத்தில் இருந்து தப்பியது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு, இந்திய வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ரசிகர்களுக்குக் கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தியபடி விராட் கோலி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், ரசிகர் கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை தவறவிட்டுக் கீழே போட்டார்.
இதைக் கவனித்த விராட் கோலி, ஒரு நொடியும் தாமதிக்காமல் உடனடியாகக் குனிந்து அந்தக் கொடியை மரியாதையுடன் கையில் எடுத்தார். பின்னர், அந்த ரசிகரை அழைத்து அவரிடம் கொடியைத் திருப்பிக் கொடுத்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை அங்கிருந்த ரசிகர் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற, அது நொடிப்பொழுதில் பரவியது.
களத்தில் பெற்ற வெற்றியைத் தாண்டி, ஒரு குடிமகனாகத் தேசியக் கொடிக்கு அவர் கொடுத்த மரியாதை, கோடிக்கணக்கான இந்தியர்களின் மனங்களை வென்றுள்ளது. "இதுதான் உண்மையான தேசப்பற்று", "வெற்றி தோல்விகளைத் தாண்டி இதுவே சிறந்த தருணம்" எனப் பலரும் கோலியைப் பாராட்டி வருகின்றனர்.
போட்டியைப் பற்றிப் பேசிய விராட் கோலி, தொடர் தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் ரன் குவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "தொடர்ச்சியாக இரண்டு 'டக் அவுட்' ஆன பிறகு, அதிலிருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சி. சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு ரன்கள் எடுத்திருந்தாலும், இந்த விளையாட்டு உங்களுக்கு அனைத்தையும் காட்டும். எனக்கு இன்னும் சில நாட்களில் 37 வயது ஆகப்போகிறது, ஆனாலும் எப்படி ரன் அடிப்பது என்று தெரியாதது போல் உணர்கிறேன். இந்த விளையாட்டு அற்புதமானது," என்றார்.
ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆடியது குறித்துப் பேசிய அவர், "ரோஹித் ஏற்கனவே களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவருடன் இணைந்து விளையாடுவது எளிதாக இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் ஆட்டத்தை நன்கு புரிந்து வைத்துள்ளோம். மீண்டும் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் மற்றும் வெற்றிகரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது மிகவும் மகிழ்ச்சி," என்று கூறினார்.
இந்தப் போட்டியில், ரோஹித் சர்மா (121*) மற்றும் விராட் கோலி (74*) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், இந்திய அணி 237 ரன்கள் என்ற இலக்கை 11.3 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் எளிதாக எட்டிப்பிடித்தது. தோல்வியுடன் தொடரைத் தொடங்கியிருந்தாலும், வெற்றியுடன் முடித்ததும், கோலியின் தேசப்பற்று மிக்க செயலும் இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.