ராய்ப்பூர் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் எதிர்பர்க்காத வகையில் ரிங்கு சிங்கை முன்னதாகவே பேட்டிங் செய்ய அனுப்பினார் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன்.
எப்போதும் கடைசி சில ஓவர்கள் மட்டும் பேட்டிங் ஆட இறங்கும் ரிங்கு சிங்கிற்கு அதிக ஓவர்கள் கிடைத்த நிலையில் போட்டியை தனி ஆளாக மாற்றினார். ஆஸ்திரேலியா அவரது ஆட்டத்தால் கதிகலங்கிப் போனது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் அடித்து வெளியேறினாலும் நல்ல துவக்கம் அளித்தார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் வரிசையில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

8.1 ஓவரில் மூன்று விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ஐந்தாம் வரிசையில் ஜிதேஷ் சர்மா பேட்டிங் செய்ய இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபினிஷர் என வர்ணிக்கப்படும் அதிரடி வீரர் ரிங்கு சிங்கை இறக்கினார் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன். அவர் நீண்ட நேரம் களத்தில் நின்றால் அதிக ரன்களை குவிப்பார் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் அதை செயல்படுத்தினார்.
ரிங்கு சிங் ஒரு பக்கம் அதிரடி ஆட்டம் ஆட, மற்றொரு துவக்க வீரர் ருதுராஜ் நிதான ஆட்டம் அடி பின் வேகம் எடுத்தார். அவர் 28 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின் 19 ஓவர் வரை களத்தில் நின்ற அவர் 29 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியில் அதிக ரன் அடித்த வீரர் ரிங்கு சிங் தான். 3 விக்கெட் இழந்த நிலையிலும் அதிரடி ஆட்டம் ஆடி, தான் வெறும் ஃபினிஷர் மட்டும் இல்லை, தன்னால் நீண்ட ஓவர்கள் களத்தில் நின்று ரன் குவிக்க முடியும் என நிரூபித்தார். இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 174 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிங்கு சிங் முன்கூட்டியே இறங்கியது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.