சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 2 ஓவர்கள் மட்டுமே பவுலிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஃப் ஸ்பின்னரான அவரை தொடர்ச்சியாக இந்திய அணி இப்படி மோசமாக பயன்படுத்தி வருவது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருக்கிறது. சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை ரீடெய்ன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி அதிகளவில் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நிதிஷ் குமார் ரெட்டி 5 போட்டிகளிலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 3 போட்டிகளிலும் விளையாடினர். இதில் நிதிஷ் குமார் ரெட்டி 9 இன்னிங்ஸில் 298 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா 5 இன்னிங்ஸில் 135 ரன்களையும், 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இறுதியாக வாஷிங்டன் சுந்தர் 114 ரன்களையும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2 போட்டிகளிலும் பெரியளவில் பவுலிங் செய்ய அழைக்கப்படவில்லை. 4வது டெஸ்டில் 50 ஓவர்களுக்கு பின்பே பந்தை கொடுத்தனர்.
சிட்னி டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் வெறும் 2 ஓவர்களை மட்டுமே வீசி இருக்கிறார். அதிலும் முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் வெறும் 37 ஓவர்களை மட்டுமே வீசி இருக்கிறார். அதிலும் 17 ஓவர்கள் முதல் டெஸ்டிலேயே வீசப்பட்டிருக்கிறது.
இதன் மூலமாக ஆஃப் ஸ்பின்னர் மற்றும் பேட்ஸ்மேனான வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி பயன்படுத்திய விதம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. பவுலிங் செய்வதற்கு வாஷிங்டன் சுந்தர் தேவைப்படவில்லை என்றால், அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளித்திருக்கலாம்.
ஆனால் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் சேர்த்து பவுலிங் செய்ய வாய்ப்பளிக்காதது அவரின் திறமையை அவமதிப்பது போன்றதாகும். அதுமட்டுமல்லாமல் வாஷிங்டன் சுந்தர் கட்டாயம் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதை இந்திய அணி நிர்வாகம் முன்பே முடிவு செய்துவிட்டது. இதனையறிந்து தான் ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்து திடீரென சென்னை திரும்பினார். ஆனாலும் அவருக்கு பவுலிங் அளிக்காதது இந்திய அணியின் மோசமான திட்டமிடலே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.