மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் டி20 போட்டி மழையால் இரத்தானது. இரண்டாவது t20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி ஹோபர்ட் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூரியகுமார் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் இங்கிலீஷ் 1 ரன்னிலும், மிட்செல் ஓவன் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். இந்த நிலையில் டிம் டேவிட் மட்டும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் டிம் டேவிட் மற்றும் ஸ்டோனிஸ் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது 38 பந்துகளில் டிம் டேவிட் 74 ரன்கள் அடித்தார். இதில் 8 பவுண்டரி 5 சிக்சர்கள் அடங்கும். இதேபோன்று மார்க்கஸ் ஸ்டோனிஸ் 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இதில் எட்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில் மேத்தீவு ஷாட் 26 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. ஆர்ஸ்தீப் மூன்று விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா வழக்கம் போல் அதிரடி காட்டி இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கில் 12 பந்துகளில் 15 ரன்கள் ஆட்டம் இழக்க சூரியகுமார் யாதவ் 2 சிக்சர் ஒரு பவுண்டரி என 24 ரன்கள் எடுத்தார்.
அக்சர் பட்டேல் 17 ரன்களில் வெளியேற திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். திலக் வர்மா 29 ரன்களில் ஆட்டம் இழக்க வாஷிங்டன் சுந்தர் பட்டையை கிளப்பினார். 23 பந்துகளில் வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸர் 3 பவுண்டரி அடங்கும்.
இதே போன்று ஜித்தேஷ் சர்மா மூன்று பவுண்டரிகளுடன் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க, இந்திய அணி 18.3 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது. இந்த நிலையில் நான்காவது டி20 போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.