மும்பை: இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணிலேயே படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம், இந்திய அணியை சீண்டி இருக்கிறார். பாகிஸ்தானும், இந்தியாவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும், பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
இந்திய அணி மோசமான நிலையில் இருக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் வகையில் பேசி இருக்கிறார் வாசிம் அக்ரம். இதற்கு எந்த பதிலடியும் கொடுக்க முடியாத நிலையில் இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அமைதி காத்து வருகின்றனர்.

92 ஆண்டு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அணி இந்திய மண்ணில், இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்று இருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் அணி நீண்ட காலமாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் தவித்து வந்தது.
ஆனால், சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சை தயார் செய்து இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அது மிகப் பெரியதாக இருக்கும். கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களை கொண்ட இரண்டு அணிகளுக்கும் அது நன்மையை அளிக்கும்." என்றார்.
மேலும், "பாகிஸ்தான் இந்திய அணியை சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சுகளில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை அவர்கள் மண்ணிலேயே 3 - 0 என வீழ்த்தி இருக்கிறார்கள்." எனக் கூறினார்.