பெங்களூர்: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மயங்க் யாதவ், ஹர்சித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோரை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கும் அழைத்து செல்ல ஆலோசித்து வருவதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை. இதனால் இந்திய அணி வீரர்கள் பலரும் உள் அரங்குகளில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருவது தெரிய வந்துள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான மாற்று வீரர்களாக ஹர்சித் ராணா, மயங்க் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான அணியில் இவர்களில் 4 பேரில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதற்கான ஆரம்பக் கட்ட பயிற்சியாகவே நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அமைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், மயங்க் யாதவிற்கு கிடைத்த போதுமான வாய்ப்புகளிலேயே அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனால் அவர் கடந்த ஆண்டுகளில் காயமடைந்திருப்பதால், கொஞ்சம் பக்குவமாக கையாள வேண்டும். அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் அவரை கண்காணித்து வருகிறோம். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பணிச்சுமை அதிகமாகும்.
மயங்க் யாதவை இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வைப்பதற்கு தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மயங்க் யாதவ் மட்டுமல்லாமல் நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா உள்ளிட்டோரும் திறமையான வீரர்கள் தான். ஆனால் அவர்களிடம் டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் குறைவாக உள்ளது. அதன் காரணமாகவே மாற்று வீரர்களாக கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அவர்களை ஆஸ்திரேலியா அழைத்து செல்லலாம் என்றும் யோசித்து வருகிறோம். அதற்கேற்பவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியில் 3 முதல் 4 தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இதனை இன்னும் சில ஆண்டுகளில் 8 முதல் 9 என்ற எண்ணிக்கையாக அதிகரிக்க வேண்டும். பேட்டிங்கில் ஏராளமான வீரர்களை போல் பவுலிங்கிலும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.