செண்ட் லூசியா : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பிட்ச் மற்றும் சூழலை சரியாக பயன்படுத்தி இந்திய அணி வென்றுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா போன்ற அணியால் வரும் அச்சுறுத்தலையும் புரிந்து கொண்டு செயல்பட்டுள்ளதாகவும், குல்தீப் யாதவை சரியான நேரத்தில் பயன்படுத்தி வென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்களை விளாசினார்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் அரையிறுதி வாய்ப்பு கூடுதல் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. நாளை காலை நடக்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் - வங்கதேசம் போட்டியில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை பொறுத்தே ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு தெரிய வரும்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், மனம் திருப்தியாக உள்ளது. ஆஸ்திரேலியா அணி என்ன மாதிரியான அச்சுறுத்தலை கொடுக்கும் என்று நன்றாக அறிவோம். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எங்களுக்கு என்ன தேவையோ, அதனை சரியாக செய்தோம். 200 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் நல்ல இலக்கு. ஏனென்றால் காற்று பலமாக வீசும் என்பதால், வெற்றி தோல்வியில் முக்கிய பங்கு வகிக்கும்.
பிட்ச் மற்றும் சூழலை சரியாக பயன்படுத்தினோம் என்று நினைக்கிறேன். அதேபோல் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்பட வேண்டிய தருணமாகவும் அமைந்தது. சரியான நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டிய தேவை இருந்தது. குல்தீப் யாதவின் பலம் என்ன என்பது தெரியும். அதனால் அவரை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். நியூயார்க் பிட்ச்கள் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் அப்படியல்ல. அரையிறுதி சுற்றை பொறுத்தவரை நாங்கள் பெரிதாக வித்தியாசமாக எதையும் செய்யப் போவதில்லை. இதுவரை எப்படி விளையாடி வருகிறோமோ, அப்படிதான் விளையாடுவோம். ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூடுதலாக புரிந்து கொள்வோம். எதிர்காலத்தை நினைத்து கூடுதல் அழுத்தத்துடன் விளையாட தேவையில்லை என்று கருதுகிறேன். இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடப் போவது நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.