சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதுவரை 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடத்தப்பட்டு வந்த நிலையில், இம்முறை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடத்தப்படவுள்ளது.
அதாவது ஆஷஸ் தொடருக்கு பின் ஆஸ்திரேலியா அணி முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதன் மூலமாகவே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை அறிய முடியும். கடந்த 2 முறையும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இதனால் பார்டர் - கவாஸ்கர் தொடர் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா வீரர்கள், ஜாம்பவான்கள் வார்த்தைப் போரில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா வீரர் மிட்சல் ஸ்டார்க் பேசுகையில், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணி தான் வென்றிருக்கிறது.
இம்முறை 5 போட்டிகள் நடக்கவுள்ளதால், கிட்டத்தட்ட ஆஷஸ் தொடருக்கு நிகரான ஒன்றாக அமைந்துள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் வெல்ல விரும்புகிறோம். இந்திய அணி பலமான அணி என்பதை அறிவோம். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களில் நாங்கள் இருக்கிறோம்.
நிச்சயம் ஜனவரி 8ஆம் தேதி எங்கள் கைகளில் பார்டர் கவாஸ்கர் கோப்பை இருக்கும் என்று நம்புகிறோம். ஒவ்வொரு முறை பேக்கி க்ரீன் தொப்பியை அணியும் போது ஸ்பெஷலாக உணர்கிறேன். இம்முறை 5 போட்டிகளிலும் வெல்ல வேண்டும். அதன்பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சென்று மீண்டும் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற வேண்டும்.
ஆஸ்திரேலியா அணிக்காக இன்னும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், 100 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை எட்டுவேன். எனது முன்னுரிமை எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தான். ஓய்வு பெறுவது பற்றிய எண்ணமே கிடையாது. தற்போது எங்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விளையாடி வருகிறோம். எங்களின் திட்டம் எல்லாம் இந்திய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.