பிரிஸ்பேன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், இதுதான் இந்திய வீரராக கடைசி நாள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பிசிசிஐ நிர்வாகம், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே மற்றும் புஜாரா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த அவர், பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடினார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் அஸ்வின் சேர்க்கப்படாத நிலையில், அஸ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், இதுவரை 537 விக்கெட்டுகளையும், 3503 ரன்களையும் விளாசியுள்ளார். இதனால் ரசிகர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்வின் 2வது இன்னிங்ஸிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், இந்திய வீரராக இதுதான் எனக்கு கடைசி நாள். ஒரு கிரிக்கெட் வீரராக இன்னும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும், அதனை கிளப் லெவல் கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவேன். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இதுதான் என் கடைசி நாளாகும்.
இந்திய அணியில் விளையாடிய நாட்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மற்ற இந்திய வீரர்களுடன் விளையாடிய நினைவு மறக்காது. அதில் சில வீரர்களை கடந்த சில ஆண்டுகளில் மிஸ் செய்திருக்கிறேன். இந்திய கிரிக்கெட்டில் கடைசி சில ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ் நாங்கள் தான் என்று சொல்லிக் கொள்கிறேன்.
இந்த நாளில் ஏராளமானோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஆனால் இந்த நேரத்தில் பிசிசிஐ, கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே மற்றும் புஜாரா உள்ளிட்டோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால் இவர்கள் தான் நான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த கேட்ச் பிடித்து உதவி இருக்கிறார்கள். அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஏனென்றால் அவர்களுடன் தான் தீவிரமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். ஓய்வு அறிவிப்புக்காக அதிக நேரம் எடுத்து கொள்ள விரும்பவில்லை. கொஞ்சம் எமோஷனலாக இருக்கிறேன். அதனால் எந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மனநிலையில் இல்லை. என்னை பற்றி நல்ல விஷயங்கள் மற்றும் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து எழுதிய பத்திரிகையாளர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.