சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், சிட்னி மைதானத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக பார்க்கலாம். முதல் ஒருநாள் போட்டியின் போது ஏற்கனவே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், கடைசி போட்டியிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக சில கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது.

இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் விளையாடிய போதும், இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடந்தாலும், இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தப் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல் விராட் கோலி கடந்த 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகிவிட்ட நிலையில், இந்தப் போட்டியிலாவது ஒரு அரைசதம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தை செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சிட்னி மைதானம் அமைந்துள்ள பகுதியில் வானிலை கொஞ்சம் மோசமாக இருப்பதாக சில தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தரப்பில், நாளை போட்டி நடக்கும் நேரத்தில் வானிலையில் எந்த சிக்கலும் இருக்காது. இந்தப் போட்டியின் போது மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. வெப்பம் 16 டிகிரி முதல் 23 டிகிரி இடையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.