மும்பை : இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 2012 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை எந்த ஒரு தொடரிலும் தோற்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அஸ்வினும் ஜடேஜாவின் பங்கும் தான்.
இந்தக் கூட்டணி பந்துவீச்சில் எதிரணி விக்கெட்டுகளை வேட்டையாடி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பேட்டிங்கில் முக்கிய கட்டங்களில் அபாரமாக ரன்கள் சேர்த்து அணியை காப்பாற்றி இருக்கிறது. இந்த நிலையில் அஸ்வின் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அஸ்வினுக்கு மாற்றாக யார் வரப்போகிறார் என்று கேள்வி எழுந்தது. ஏற்கனவே அணியில் வாஷிங்டன் சுந்தர் ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள் வாய்ப்புக்காக அக்சர் பட்டேல்,குல்திப் யாதவ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அஸ்வினை மாற்றக்கூடிய ஆப் பின்னர் யார் என்று அனைவருக்குமே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.
இதில் தற்போது பிசிசிஐ தேர்வு குழு கொடுத்திருக்கும் விடை தான் தனுஷ் கோட்டியான். 26 வயதான தனுஷ்கோட்டியான் ரஞ்சிப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். இதுவரை 33 முதல் தர போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் அவருடைய பந்து வீச்சில் சராசரி 25 ஆகும். இதுவரை மூன்று முறை அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
தனுஷ் கோட்டியான் ஸ்பெஷாலிட்டி அவர் வெறும் சுழற் பந்துவீச்சாளர் மட்டும் கிடையாது. அஸ்வினை போலவே பேட்டிங்களும் அபாரமாக விளையாட கூடியவர். முதல் தர போட்டிகளில் இதுவரை 1525 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதமும், 13 அரை சதமும் அடங்கும். இதில் தனுஷ்கோட்டியான் பேட்டிங் சராசரி 41 என்ற அளவில் இருக்கின்றது. இப்படி திறமை வாய்ந்த தனுஷ் கோட்டியானை ஐபிஎல் தொடரில் எந்த அணியும் தற்போது ஏலத்தில் எடுக்கவில்லை.
தனுஷ்கோட்டியான் உயரமாக இருக்கக்கூடிய வீரர். டெஸ்ட் போட்டிக்கு என அளவெடுத்து தைத்தது போல் அனைத்து திறமைகளும் தனுஷ் கோட்டியானுக்கு இருக்கிறது. தனுஷ்கோட்டியானின் பலமே பந்தை நன்றாக ஃபிளைட் செய்து பேட்ஸ்மேனை அடித்து ஆட அழைப்பிதழ் அனுப்புவார். அல்வா மாதிரி பந்து வருகிறதே என பேட்ஸ்மேன்களும் அதனை அடித்து ஆட முற்படும் போது, ஸ்லிப்பில் கேட்ச் ஆகிவிடுவார்கள்.
அது மட்டுமல்லாமல் சில பந்து நேரடியாக பேட்ஸ்மேன்களை lbw ஆகும். இந்திய ஆடுகளங்களில் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய ஒரு மிஷின் ஆகவே தனுஷ்கோட்டியான் இருப்பார். இதனால் தனுஷ்கோட்டியான் நல்ல தேர்வாக அறியப்பட்டாலும், அவருக்கு உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.இனி இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். இதில் இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளராக வைத்து விளையாடினால் தனுஷ்கோட்டியானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.