பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி யாருமே எதிர்பாராத வகையில் தடுமாறி வருகிறது. பெர்த் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பல மாதங்களுக்குப் பின் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தொடக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா 14 பந்துகளில் 8 ரன்களிலும்,முன்னாள் கேப்டன் விராட் கோலி 8 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகியும் தற்போதைய புது கேப்டன் கில் 18 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் இந்திய அணி 25 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ஐந்தாவது வீரராக கே எல் ராகுல் தான் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் யாருமே எதிர்பார்க்காத படி அக்சர் பட்டேல், கம்பீர் களமிறக்க முடிவெடுத்திருக்கிறார்.
இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணியில் இன்று ஆல்ரவுண்டர்கள் மூன்று வீரர்கள் உள்ளனர். அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்ப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் நிதிஷ் குமார் ரெட்டி என ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும் உள்ளனர். பொதுவாக பெர்த் போன்ற ஆடுகளங்களில் பந்து கடினமாக இருக்கும் போது நன்றாக பவுன்ஸ் ஆகும்.
மேலும் முதல் 15 ஓவர்கள் வரை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஆட்டம் இழந்து உள்ள நிலையில் ராகுலும் களத்திற்கு வந்து ஆட்டம் நடந்தால் அது மிகப்பெரிய சரிவை இந்திய அணிக்கு ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல் தொடக்க வரிசையில் விளையாடும் நான்கு வீரர்களுமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர்.
இதனால் இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் களத்திற்கு வருவது நல்லது என முடிவெடுத்த கம்பீர் அக்சர் பட்டேலை ஐந்தாவது வீரராக களம் இறக்கி முடிவு எடுத்திருக்கிறார். இந்த முடிவு இந்திய அணிக்கு கை கொடுக்குமா கொடுக்காதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.