மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பேட்டிங் வரிசையை மாற்றுவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேசன் கில்லஸ்பி கடும் விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பேட்டிங் செய்தார்.
ஆனால் அவர் பேட்டிங் வரிசையில் அகசர் பட்டேல் கீழ் விளையாடினார். பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்திற்கு வந்த சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு சிக்சர்கள் அடங்கும். இதனால் இந்திய அணி சுலபமாக வெற்றியை எட்டியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேசன் கில்லஸ்பி, அக்சர் பட்டேலுக்கு கீழ் வாஷிங்டன் சுந்தர் ஏன் பேட்டிங் செய்கிறார் என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.அவர் 49 ரன்கள் அடித்திருக்கிறார். அது உண்மையிலேயே சூப்பரான இன்னிங்ஸ். ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை பார்த்து அவர் கொஞ்சம் கூட பயப்படவில்லை.
ஆஸ்திரேலிய வீரர்களை அபாரமாக எதிர் கொண்டு ரன்களை சேர்த்தார். இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. ஆனால் அக்சர் பட்டேல் தனக்கு உரிய இடத்தை விட இரண்டு இடம் அதிகமாக முன்னே பேட்டிங் செய்ய வருகிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது.அவர் நல்ல வீரர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இது சரிவராது இந்திய ஆடுகளங்களுக்கு வேண்டுமானால், இந்த இடம் அவருக்கு சரியாக இருந்திருக்கும்.
சென்னையில் நான் பயிற்சியாளராக நான் இருந்தபோது வாஷிங்டன் சுந்தரிடம் சில நேரத்தை நான் செலவிட்டு இருக்கின்றேன். அவரிடம் சாதிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருக்கின்றது.
களத்திற்கு சென்று தன்னுடைய திறமையை நம்பி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் அவ்வாறு விளையாடுகிறார். இதேபோன்று இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா ஆக்ரோஷமாக விளையாடுகிறார்.
முதல் பந்தில் இருந்து ரன்களை அடித்து எதிரணிக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்துகிறார். அவர் களத்திற்கு வரும்போது எதிர்பார்ப்பு எகிர்கிறது அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று ஜேசன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.