மொஹாலி : ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது.
உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய தனக்கான உலகக்கோப்பை பேட்டிங் திட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு முன் அந்த அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடும் திட்டத்தை செயல்படுத்தியது.

அது தென்னாப்பிரிக்க அணியை முதலில் நிலைகுலைய வைத்தாலும், பின்னர் விக்கெட்களை வீழ்த்தி அந்த அணி ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது. ஆனால், அந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இடம் பெறவில்லை.
தற்போது ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு திரும்பி விட்ட நிலையில், ஆஸ்திரேலியா அதே திட்டத்தை இந்திய அணிக்கு எதிராக மீண்டும் செயல்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கலாம். அப்படி நடந்தால் இந்திய அணி அதை எதிர்கொள்ள தயாராக இருக்குமா? என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
டேவிட் வார்னர் முதலில் அதிரடி ஆட்டத்தை துவங்குவார். அடுத்து மிட்செல் மார்ஷ் அவருடன் சேர்ந்து எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்வார்கள். முன்பு ட்ராவிஸ் ஹெட் இதை செய்தார். அவர் காயத்தில் இருப்பதால் மிட்செல் மார்ஷ் அதை தொடருவார். அடுத்து வரும் லாபுஷேன், கிரீன், ஸ்டோனிஸ் ஆகியோரும் அதிரடி ஆட்டம் ஆடுவதில் வல்லவர்கள்தான். ஆஸ்திரேலிய அணி இப்படி ஆடினால் இந்திய அணி யாரை வைத்து பதிலடி கொடுக்கும்?
இந்திய அணியில் பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டுமே ரன்களை குறைவாக கொடுக்கும் பந்துவீச்சாளர்கள். ஜடேஜா சில போட்டிகளில் அதிக ரன்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் ஆடப் போவதில்லை.
ஷர்துல் தாக்குர் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பவர். அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றால் அவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது தெரியாது. ஆஸ்திரேலிய அணி அடித்து ஆட ஆரம்பித்தால் உடனடியாக விக்கெட்களை வீழ்த்துவது மட்டுமே இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.
அதை செய்யாமல் போனால், இந்திய அணி 400 ரன்களை சேஸ் செய்ய வேண்டி இருக்கும். முதல் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் கேஎல் ராகுல் என்ன செய்யப் போகிறார்?