சிட்னி: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா மட்டும் இல்லையென்றால், இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் இருந்திருக்கும் என்று முன்னாள் வீரர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை என்று கூறியுள்ள அவர், இந்த இந்திய அணியிலேயே பிரசித் கிருஷ்ணா இருப்பதாக பாராட்டியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை மறுநாள் அதிகாலை தொடங்கவுள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிளென் மெக்ராத்தின் மனைவி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

அதன்பின் கிளென் மெக்ராத் புற்றுநோய்-க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சிட்னியில் நடக்கவுள்ள பிங்க் டெஸ்ட் போட்டி புற்றுநோய்-க்கான விழிப்புணர்வு போட்டியாகவே நடத்தப்படவுள்ளது. இதற்காக சிட்னி மைதானமே பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டு, வீரர்களின் ஜெர்சியும் பிங்க் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்து கிளென் மெக்ராத் பேசுகையில், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பும்ரா 30 விக்கெட்டுகளை 12.83 சராசரியுடன் வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணியின் ஆட்டத்தில் பும்ராவின் பங்கு அளப்பறியது என்று தான் சொல்ல வேண்டும். பும்ரா மட்டும் இல்லையென்றால், இந்த டெஸ்ட் தொடர் சரிக்கு சமமாக அல்லாமல் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி இருக்கும்.
பும்ராவின் செயல்பாடுகள் ஸ்பெஷல் தான். இளம் வயதிலேயே ஆஸ்திரேலியா பிட்ச்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து தகவமைத்து கொண்டுள்ளார். சில அடிகள் மட்டும் ஓடி வரும் பும்ரா, எப்படி வேகத்தை உருவாக்குகிறார் என்பதை பார்க்கவே அற்புதமாக உள்ளது. அதேபோல் என்னை போலவே அவரும் கை முட்டியை கொஞ்சம் நீட்டித்து பவுலிங் செய்கிறார்.
அதனை சமாளித்து பந்தின் இரு பக்கம் ஸ்விங் செய்யும் போது அற்புதமாக கட்டுப்படுத்துகிறார். இந்திய அணி பும்ராவின் வேலைப்பளுவை சிறப்பாக கையாளும் என்று கருதுகிறேன். ஏனென்றால் பும்ராவின் ரசிகர்களில் நானும் ஒருவர். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் திறமையானவர்கள் ஏராளம். சென்னையில் உள்ள எம்ஆர்எஃப் பேஸ் ஃபவுன்டேஷனில் 12 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன்.
தற்போது இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவும் இருக்கிறார். அவர் மிகச்சிறந்த இளம் பவுலர்கள் ஒருவர் என்று சொல்வேன். அவருக்கு கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் அமையும். இந்திய அணியில் வீரர்களுக்கு பஞ்சமே கிடையாது. பவுலர்கள் மட்டுமல்லாமல் ஜெய்ஸ்வால் போன்ற பேட்ஸ்மேன்களையும் உருவாக்குகிறார்கள். அவர்களிடம் இருக்கும் சிறப்பு என்னவென்றால், கொஞ்சம் கூட இளம் வீரர்கள் பயமே கிடையாது. எங்களிடமும் ஜெய்ஸ்வாலை போல் கான்ஸ்டாஸ் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.