ஷார்ஜா: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாழ்வா, சாவா? போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பேட்டிங்கில் சில தவறுகளை செய்தார். அவர் அரை சதம் அடித்த போதும் இடையில் அவர் நிறைய பந்துகளை வீணடித்ததால் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இது குறித்து ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வரும் நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஹர்மன்பரீத் குறித்து பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவே இந்திய ஆண்கள் அணி தோற்று இருந்தால் கடுமையாக விமர்சனம் செய்து இருப்போம் என சுட்டிக் காட்டி உள்ளனர்.

2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் தனது கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை சந்தித்து இருந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பு மிகவும் சிக்கலாக மாறிவிடும் என்ற நிலையில் ஆடியது இந்திய அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 151 ரன்கள் எடுத்தது.
அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது மற்றவர்கள் சொதப்பிய போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் நிலையாக நின்று அரை சதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனால், அவர் நடுவில் பல ஓவர்களில் டெஸ்ட் போட்டி போல மந்தமாக ஆடினார். அதனால், இந்திய அணிக்கு ரன் ரேட் அழுத்தம் ஏற்பட்டது.
பின்னர் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட பதிவில், "இந்தியாவைத் தவிர வேறு எந்த அணியும் ஆஸ்திரேலியா நிர்ணயித்த மிகப்பெரிய இலக்குக்கு அருகே கூட சென்று இருக்காது. அதுவும் இந்த கடினமான பிட்ச்சில். நான் நிச்சயம் இந்தியா மிக நன்றாக ஆடியதாக தான் சொல்வேன். ஹர்மன்ப்ரீத் ஒரு நட்சத்திரம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதை கண்ட இந்திய ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர். ஒரு ரசிகர், "நாம் இப்போது தோல்வியையும் கொண்டாடத் துவங்கி விட்டோமா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார். மற்றொரு ரசிகரோ, "இதே ஆண்கள் அணியாக இருந்தால் நாம் அவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் விளாசி இருப்போம். அதுதான் இங்கே பிரச்சனை. நமது கிரிக்கெட் வல்லுனர்கள் மகளிர் அணி பற்றிய உண்மையை பேச தயங்குகிறார்கள். அதனால் தான் நாம் மகளிர் பிரிவில் இதுவரை ஒரு ஐசிசி தொடரை கூட வெல்லவில்லை" என்று கூறி இருக்கிறார்.
மற்றொருவரோ ஹர்மன்ப்ரீத் மும்பையை சேர்ந்தவர் என்பதை வைத்து ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். "மும்பை லாபி வீரருக்கு ஒரு சிக்கல் என்றால் மஞ்ச்ரேக்கர் மற்றும் கவாஸ்கர் அவர்களை பாதுகாக்க ஓடி வந்து விடுவார்கள்." என சொல்லி இருக்கிறார். தற்போது மகளிர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.