மும்பை: 2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்திய போது, மைதானத்தில் சுமார் 34 ஆயிரம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுவாக இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்கு அதிக அளவில் ரசிகர்கள் மைதானத்திற்குச் செல்ல மாட்டார்கள் என்ற நிலை உள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற சில நாடுகளிலேயே மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரவேற்பு உள்ளது. இந்தியாவில் சில வருடங்களாகத்தான் மகளிர் ஐபிஎல் போட்டிகளை காண்பதற்கு அதிக ரசிகர்கள் வருகை தருகிறார்கள். அதில் முதன்மையாக இருப்பது மும்பை ரசிகர்கள் தான்.
ஒவ்வொரு ஆண்டும் மகளிர் ஐபிஎல் தொடர் மற்றும் இந்திய மகளிர் அணி ஆடும் சில கிரிக்கெட் தொடர்கள் மும்பையில் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கெல்லாம் சில ஆயிரங்களில் ரசிகர்கள் வருகை தந்து வந்தனர். ஆனால், நேற்று நடந்த மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண்பதற்கு எப்போதும் இல்லாத அளவிற்கு, சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் நவி மும்பை பகுதியில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அவர்கள் இந்திய அணிக்குத் தந்த ஆதரவு ஒருபுறம் இருக்க, போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விண்ணை பிளக்கும் அளவுக்குக் கோஷம் எழுப்பினர். அந்தக் காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
34 ஆயிரம் ரசிகர்களுக்கு முன் இந்திய மகளிர் அணி அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தியது பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், அது நிச்சயம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான புதிய அடித்தளத்தை அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.