பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்று இருந்த மூன்று வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதற்கு இடையே இந்திய அணியில் இடம் பெற்று இருந்த மூன்று ரிசர்வ் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

முன்னதாக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அவர்களுடன் மூன்று ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்பட்டனர். அந்த மூவரும் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆவர். யாஷ் தயாள், முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய மூவரும் ரிசர்வ் வீரர்களாக இடம் பெற்று இருந்தனர்.
18 வீரர்கள் கொண்ட அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா என ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்களுடன் பகுதி நேர வேகப் பந்துவீச்சாளராக நிதிஷ் குமார் இடம் பெற்று இருந்தார். முதன்மை அணியிலேயே ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில், கூடுதலாக மூன்று ரிசர்வ் வேகப் பந்துவீச்சாளர்களை இந்திய அணி அழைத்து சென்றது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி என்ற உள்ளூர் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க வேண்டி முகேஷ் குமார், யாஷ் தயாள் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய மூவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேவை இனி இல்லை என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து இருப்பது இதற்கு முக்கிய காரணமாகும். அவர்கள் மூவரும் பயிற்சியின் போது பந்து வீசவே இந்திய அணியுடன் பயணித்தனர் என்பதால் தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.