திருவனந்தபுரம் : இந்திய அணியின் இளம் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் செய்த தவறுக்கு தன்னை விட மூத்த வீரரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு பின் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அந்த சம்பவம் முதல் டி20 போட்டியின் போது நடந்தது. ஜெய்ஸ்வால் மன்னிப்பு கேட்டதையும், அதற்கு ருதுராஜ் அளித்த பதிலையும் அவர் தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்த போது ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெயிக்வாட் அணிக்கு துவக்கம் அளித்து பேட்டிங் செய்தனர்.
அப்போது முதல் ஓவரில் பந்தை பீல்டர் எடுத்து விட்டதை சரியாக பார்க்காமல் செய்த ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஜெயிக்வாட்டை ரன் ஓடி வருமாறு அழைத்தார். ஆனால், ருதுராஜ் பாதி தூரம் வந்த நிலையில் அவரை ரன் அவுட் செய்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.
ஜெய்ஸ்வால் செய்த சொதப்பலால் தான் ருதுராஜ் கெயிக்வாட் ரன் அவுட் ஆனார். அப்போதே ஜெய்ஸ்வால் ஓடிச் சென்று ருதுராஜ்-இடம் பேசினார். அது பற்றி இரண்டாவது டி20 போட்டிக்கு பின் ஜெய்ஸ்வாலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், தான் அப்போது ருதுராஜ் கெயிக்வாட்-இடம் ஓடிச் சென்று தன் தவறால் தான் இப்படி நடந்து விட்டது. மன்னித்து விடுங்கள் என கேட்டதாகவும், அதற்கு அவர் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற தவறுகள் நடப்பது தான் எனக் கூறி அவரை சாந்தப்படுத்தி விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், போட்டி முடிந்த பின் தாங்கள் இருவரும் வெளியே சென்று சாவகசமாக அமர்ந்து பேசியதாகவும், இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பேசி முடிவு எடுத்ததாகவும் கூறினார் ஜெய்ஸ்வால். இதை அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் இருவரும் அரைசதம் அடித்தனர். ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். ருதுராஜ் கெயிக்வாட் 43 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார்.