மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வாலை விராட் கோலி ரன் அவுட் ஆக்கி விட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடியது. ஸ்மித் 142 ரன்கள் விளாச, அந்த அணி 477 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. கேப்டன் ரோகித் சர்மா மூன்று ரன்களிலும், கே.எல் ராகுல் 24 ரன்களிலும் ஆட்டம் இழக்க இந்திய அணி 51 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு முனையில் அபாரமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 81 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து சிக்சர், பவுண்டரி என அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. விராட் கோலியும் அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்துவந்தார்.
இதனால் இந்திய அணி எந்த நெருக்கடியும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால் ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்திருந்தபோது, ஒரு மோசமான ரன் அவுட்டில் சிக்கி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் அடித்த பந்து கம்மின்ஸ் இடம் பிடிபட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை பார்க்காமல் விராட் கோலி பின்னால் திரும்பி கம்மின்ஸ் பந்தை பிடித்தாரா என்று பார்த்தார்.
இதனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை விராட் கோலி கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில் விராட் கோலி கவனித்த போது ஜெய்ஸ்வால் எதிர்முனைக்கே வந்துவிட்டார். மேலும் விராட் கோலி ஜெய்ஸ்வாலை நம்பி ஓடி இருந்தால் நிச்சயம் அந்த ரன்னை எடுத்திருக்கலாம்.ஆனால் விராட் கோலி தேவையில்லாமல் ரன் ஓடாமல் நிற்க ஜெய்ஷ்வால் சுலபமாக ரன் அவுட் ஆக்கப்பட்டார். இதன் மூலம் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 82 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் ஏற்பட்ட கவனச் சிதறல் காரணமாக விராட் கோலி 36 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி நான்கு விக்கெட் களுக்கு 154 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.