சிட்னி: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் 32 டெஸ்ட் போட்டிகளில் குவித்த ரன்களை, தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 19 டெஸ்ட் போட்டிகளிலேயே குவித்திருப்பது ரசிகர்களிடையே வியப்பை அளித்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் சுப்மன் கில் மிகப்பெரிய ஸ்கேம்மர் என்று விளாசி தள்ளி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணி வீரர்களின் திறமையை மீண்டும் பரிசோதிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்திருக்கிறது. அதேபோல் நீண்ட நாட்களாக ஃபார்மின்றி இந்திய அணியில் நீடித்து வந்த வீரர்களையும் அடையாளம் காட்டி இருக்கிறது.

இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீதான வெளிச்சம் காரணமாக பல வீரர்கள் தொடர்ச்சியாக தப்பி வந்தனர். அதில் முக்கியமான வீரர் சுப்மன் கில். ஏனென்றால் வெளிநாடுகளில் சுப்மன் கில்லின் பேட்டிங் மோசமாகவே இருந்துள்ளது. கடைசியாக 2021 காபா டெஸ்டில் தான் சுப்மன் கில் அரைசதம் அடித்திருக்கிறார்.
அதுதான் அவரின் அறிமுக டெஸ்ட் தொடராகும். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மோசமாக ஆடிய சுப்மன் கில், சொந்த மண்ணில் மட்டும் சிறந்த ஆட்டத்தை விளையாடி வந்தார். தற்போது பார்டர் கவாஸ்கர் டிராபியில் 5 இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய சுப்மன் கில் 93 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
அதாவது மிட்சல் ஸ்டார்க், சாம் கான்ஸ்டஸ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோரை விடவும் சுப்மன் கில் மோசமான பேட்டிங்கை ஆடி இருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்களிடையே முக்கியமான ஸ்டாட்ஸ் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில், இதுவரை 5 சதங்கள், 7 அரைசதங்கள் உட்பட 1,893 ரன்களை விளாசி இருக்கிறார்.
மறுபுறம் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 10 அரைசதங்கள் உட்பட 1,798 ரன்களை விளாசி இருக்கிறார். அதாவது சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 95 ரன்கள் மட்டும் தான். ஆனால் ஜெய்ஸ்வாலை விடவும் 13 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் கூடுதலாக விளையாடி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணிலும் தன்னால் ரன்களை குவிக்க முடியும் என்பதையும் ஜெய்ஸ்வால் நிரூபித்துள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஆசியாவுக்கு வெளியில் சுப்மன் கில் ஒரு அரைசதத்தை கூட அடிக்கவில்லை. இதனால் இந்திய அணியின் ரியல் ஸ்கேம்மர் சுப்மன் கில் தான் என்று ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
ஏனென்றால் ஒருநாள் மற்றும் ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் ஆடிய ஆட்டம் அவர் மீதான விமர்சனத்தை குறைத்திருக்கிறது. ஆனால் ஒருநாள் போட்டிகளிலும் கூட இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் மட்டுமே சுப்மன் கில் ஆடியிருக்கிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் வழக்கம் போல் நடையை கட்டி இருக்கிறார். இதனால் அவரை முதலில் இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.