மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்திய அணி இன்று பிரிஸ்பேன் நகருக்கு புறப்பட்டு சென்றது. ஐந்து போட்டிகள் கொண்டிருந்த தொடர்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாம் டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சூழலில் அடிலெய்டில் இருந்து விமானம் மூலம் பிரிஸ்பேனுக்கு செல்ல இந்திய அணி வீரர்கள் தயாராக இருந்தனர். அடிலெய்டில் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து பேருந்து மூலம் விமான நிலையத்திற்கு இந்திய அணி வீரர்கள் சென்றனர்.

அப்போது இந்திய வீரர்கள் அனைவரும் வந்த நிலையில் ஜெய்ஸ்வால் மட்டும் தனது ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வரவில்லை. ஜெய்ஸ்வாலுக்காக 20 நிமிடம் வரை காத்திருந்த இந்திய அணி வீரர்கள் பிறகு அவரை விட்டு புறப்பட்டு சென்று இருக்கிறார்கள்.
புறப்படுவதற்கு முன் ரோகித் சர்மா பேருந்து விட்டு கீழே இறங்கி பாதுகாப்பு அலுவலரிடம் கோபமாக ஏதோ பேசி விட்டு மீண்டும் பேருந்தில் சென்று இருக்கிறார். இதனை அடுத்து தான் பேருந்து கிளம்பி இருக்கிறது. பேருந்து சென்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு தான் ஜெய்ஸ்வால் ஹோட்டலை விட்டு வெளியே வந்து இருக்கிறார்.
அப்போது இந்திய அணி பேருந்து சென்று விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து இந்திய அணியின் பாதுகாப்பு அதிகாரிகள் ஜெய்ஸ்வாலை பத்திரமாக காரில் அழைத்து விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள். ஜெய்ஸ்வால் இந்திய அணி பேருந்தை தவறவிட்டது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஜெய்ஸ்வால் மீது தான் தவறு என்றும் திறமை இருந்தால் மட்டும் போதாது ஒழுக்கமும் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஜெய்ஸ்வாலுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் அடித்து அணி வெற்றி பெற்றதால் அவர் தாம் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது என்றும் இந்திய அணியை பொறுத்தவரை அனைவரும் சமம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதை அடுத்து பேருந்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால் மீது அபராதம் விதிக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.