பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தை தவறவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே ரவி சாஸ்திரி கவாஸ்கர், நாதன் லயான் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் ஜெய்ஸ்வாலை புகழ்ந்து பேசினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இந்த தொடரில் ஜெய்ஸ்வால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

தற்போது ஆஸ்திரேலிய வீரர்களின் கருத்தை ஜெய்ஸ்வால் உண்மையாக்கிவிட்டார். பெர்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் ஆட்டம் இழந்த போது இந்தியா இந்த போட்டியில் தோற்றுவிடும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் பும்ரா அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 104 ரன்கள் சுருட்டினார்.
சரி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு விட்டோம் பேட்டிங்கில் யார் தான் ரன்கள் சேர்க்கப் போகிறார் என்று ரசிகர்களிடம் நம்பிக்கையே இல்லாமல் இருந்தது. ஆனால் ஜெய்ஸ்வால் தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் தான் இந்தியாவில் மட்டும் ரண்கள் சேர்க்கும் வீரர் கிடையாது தம்மால் வெளிநாட்டிலும் ரன்கள் சேர்க்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். ஜெய்ஸ்வால் அடித்த நான்கு சதங்களில் SENA நாடுகளில் அடிக்கப்பட்ட முதல் சதமாகும்.
இதில் குறிப்பாக ஜெய்ஸ்வால் அடித்த நான்கு சதமே 150 ரன்கள் மேல் இருக்கிறது. இதில் இரண்டு சதம் இரட்டை சதமாகும். இதனால் இம்முறை மூன்றாவது இரட்டை சதத்தை ஜெய்ஸ்வால் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலிய வீரர்களை வெறுப்பேற்றும் விதமாக விளையாட ஜெய்ஸ்வால் பௌண்டரிகள், சிக்ஸர் என ஈஸியான பந்தையும் அடித்து விளையாடினார். இதன் மூலம் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மார்ஷ் பந்துவீச்சில் 161 ரன்களில் ஆட்டம் இழந்தார்.