சிட்னி: இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரை எதிரணி வீரர்களும் பாராட்டி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார்.
அவர் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களை அடித்து இருந்தார். மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் அவர் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்து இருந்த போதும் மிக கடினமான சூழ்நிலைகளில் அவர் சிறப்பாக ஆடி மூன்று இன்னிங்ஸ்களில் சிறப்பாக ஆடி இருந்தது அவரது திறமையை வெளி உலகுக்கு உணர்த்தியது.

அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 391 ரன்கள் எடுத்து இருந்தார். இரண்டு அணி வீரர்களையும் சேர்த்து பார்க்கும் போது அவர் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரராக இருந்தார். ட்ராவிஸ் ஹெட் 448 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார்.
ஜெய்ஸ்வாலின் பேட்டிங் சராசரி 43.4 என்பதாக இருந்தது. பெர்த் டெஸ்ட் போட்டியில் அவர் 161 ரன்கள் சேர்த்து இருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. அதற்கு ஜெய்ஸ்வால் முக்கிய காரணமாக இருந்தார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார் ஜெய்ஸ்வால். இந்த நிலையில், தனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை பற்றி அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா பதில் அளித்து இருக்கிறார்.
மேலும், முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் அவரை பாராட்டி இருக்கிறார். ஜெய்ஸ்வால் வெளியிட்டு இருக்கும் அந்தப் பதிவில் என்ன கூறி இருக்கிறார் என பார்க்கலாம். "ஆஸ்திரேலியாவில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். துரதிஷ்டவசமாக முடிவு நாங்கள் நம்பியதைப் போல அமையவில்லை. ஆனால், நாங்கள் இதிலிருந்து முழு பலத்துடன் மீண்டு வருவோம். உங்களுடைய ஆதரவு மிகவும் அவசியம்." என்று ஜெய்ஸ்வால் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஜெய்ஸ்வாலின் பதிவுக்கு பதில் அளித்து இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, "உங்களுடைய வேலையை விரும்புகிறேன் சகோதரா." எனக் குறிப்பிட்டு இருக்கிறார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அவரது பதிவில், "நீ ஒரு சூப்பர் ஸ்டார். நீ ஆடுவதை நான் ரசித்து பார்த்தேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை எதிரணியினரும் பாராட்டி வருவதன் மூலம் அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக மாறி வருகிறார் என்பதை நாம் உணரலாம்.