பெர்த் : இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மிகச்சிறந்த வீரர்கள் அணியில் உருவாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். கவாஸ்கர், சச்சின், விராட் கோலி போன்ற வீரர்கள் வரிசையில் தற்போது ஜெய்ஸ்வால் இணைந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.
கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்பவர் என்றால் டி20 ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும். இந்திய அணியில் பல வீரர்கள் பல சாதனைகளைப் படைத்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சிலர் ஜொலித்திருக்கிறார்கள்.

விராட் கோலிக்கு பிறகு தற்போது அந்த பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் விராட் கோலியை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு ஜெய்ஸ்வால் முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடிருக்கின்றார். விராட் கோலி முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் 998 ரன்கள் அடித்திருக்கிறார்.
ஆனால் ஜெய்ஸ்வால் முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 1568 ரன்கள் அடித்து இருக்கின்றார். விராட் கோலியின் சராசரி முதல் 15 டெஸ்ட் போட்டிக்கு பிறகு 41.58 என்ற அளவில் இருந்தது. ஆனால் ஜெய்ஸ்வாலின் சராசரி 58.07 என்ற அளவில் இருக்கின்றது. முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி ஐந்து அரை சதம் நான்கு சதம் அடித்திருக்கிறார். ஜெய்ஸ்வால் 8 அரை சதம் நான்கு சதம் அடித்திருக்கின்றார்.
விராட் கோலி முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாகவே 5 சிக்சர் தான் அடித்து இருந்தார். ஆனால் ஜெய்ஸ்வால் முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் 38 சிக்சர்களை அடித்து இருக்கின்றார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் சதமாக அடித்து வந்தாலும் அதனை பெரிய சதமாக மாற்ற முடியாமல் தடுமாறினார்.
ஆனால் ஜெய்ஸ்வால் தற்போது அடித்திருக்கும் நான்கு சதமே 150 ரன்கள் மேல் தான். இதில் இரண்டு இரட்டை சதம் அடங்கும். ஜெய்ஸ்வால், வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆடுகளங்களில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இதனால் முதல் 15 டெஸ்ட் போட்டி முடிவில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ஜெய்ஸ்வால் ஜொலித்து இருக்கின்றார். எனினும் இதன் பிறகு அவர் விராட் கோலியை போல் தொடர்ந்து ஒரே மாதிரி விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.