பெங்களூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டி யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முக்கியமான போட்டியாக மாறி உள்ளது.
இந்திய அணியின் அதிரடி துவக்க வீரராக அறிமுகம் ஆகி இருக்கும் ஜெய்ஸ்வால் அணியில் இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்றால் ஐந்தாவது டி20 போட்டியில் பெரிய இன்னிங்க்ஸ் ஒன்றை ஆடியே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரில் நடந்த முதல் நான்கு டி20 போட்டிகளில் அவர் 117 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக உள்ளது. ஆனால், அவர் தனக்கு கிடைக்கும் அதிரடி துவக்கத்தை தக்க வைக்கவில்லை என்ற குறை மட்டும் உள்ளது.

அவர் அந்த நான்கு போட்டிகளில் 21, 53, 6, 37 ரன்கள் எடுத்துள்ளார். இதுவே டி20 போட்டிகளில் நல்ல ஸ்கோர் தான். ஆனால், இந்திய அணியில் துவக்க வீரர் என்ற இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது இதே தொடரில் மற்றொரு துவக்க வீரராக ஆடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் 4 போட்டிகளில் 213 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்துள்ளார். அதனால் அவருக்கு இனி டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்.
அடுத்து நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு சுப்மன் கில் துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த தொடரில் துவக்க வீரராக ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் இடையே போட்டி ஏற்படும். எனவே, ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய டி20 தொடரின் கடைசி போட்டியில் அரைசதம் அல்லது சதம் அடித்தால் டி20 அணியில் அடுத்த வாய்ப்பை பெறுவார். இல்லையெனில் மாற்று வீரராக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரை இந்தியா 3 - 1 என கைப்பற்றி உள்ளது. ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா நிச்சயம் ஆறுதல் வெற்றி பெற முயற்சி செய்யும். இந்திய அணியிலும் வாய்ப்பு பெறாத சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.