மும்பை: கிரிக்கெட் வீரர், வர்ணனையாளராக இருப்பதை விடவும் தேர்வுக் குழு தலைவராக இருப்பது கடினமாக இருப்பதாக அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். நாம் எடுக்கும் ஒரு முடிவு வீரர்களின் தலையெழுத்தை மாற்றிவிடும் என்பதால், அனைவரிடமும் சென்று விளக்கம் கொடுப்பது இயலாத விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்திய வீரர்கள் பெர்த் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், ஒரு தேர்வுக் குழு தலைவராக செயல்படுவது எவ்வளவு கடினம் என்றும் பேசி இருக்கிறார். இந்திய தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் வந்த பின், 2 ஐசிசி கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் தனது சிரங்களை பேசி இருக்கிறார். இதுதொடர்பாக அஜித் அகர்கர் பேசுகையில், தேர்வுக் குழு தலைவராக இருப்பதை விடவும் வர்ணனையாளராக இருப்பது மிகவும் எளிதான விஷயம். வர்ணனையாளர் பணிக்கும் கடுமையாக உழைக்க வேண்டும். மைதானத்தில் அதிக நேரம் செலவிட வேண்டியது இருக்கும்.
அதேபோல் சரியான வார்த்தை கிடைக்கும் வரை, வர்ணனையாளர் பணி நிறைவடையாது. ஆனால் போட்டி முடிந்துவிட்டால், நேராக வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க முடியும். அதேபோல் ஒரு வீரராக இருக்கும் போது கிடைக்கும் திருப்தியை வேறு எந்த பணியாலும் கொடுத்துவிட முடியாது. ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும், நமது பணி என்ன என்பது நன்றாக தெரியும்.
அதேபோல் களத்தில் இறங்கும் போது நமது கைகளில் பேட் அல்லது பால் நிச்சயம் இருக்கும். ஆனால் தேர்வுக் குழு தலைவராக இருப்பது மிகவும் கடினம். ஏனென்றால் நம் கைகளில் எதுவும் இருக்கது. இந்தியாவில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையும், அவர்களின் திறமையும் வைத்து தேர்வு செய்ய வேண்டும். இப்போது அதிகளவில் இருப்பதால், மிகவும் சவால் நிறைந்த ஒன்று.
அதனை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன். ஒரு வீரரை தேர்வு செய்கிறோம் என்றால், அவரின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறோம். அதேதான் ஒரு வீரரை நீக்கும் போதும். நாம் எடுக்கும் ஒரு முடிவு வீரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் ஒவ்வொரு வீரரிடம் சென்று விளக்கம் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.