சிட்னி: இந்திய அணி சமீபத்தில் நடந்த முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. 1 - 3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. இந்த நிலையில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இந்திய அணியின் தோல்வியை பற்றியும், மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த தொடரில் சரியாக ரன் குவிக்காதது பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கிடைத்த இந்த தோல்வி ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றும், ஆனால் அதற்கு முன் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்ததை மட்டும் ஏற்கவே முடியாது எனவும் யுவராஜ் சிங் குறிப்பிட்டு இருக்கிறார். இது பற்றி யுவராஜ் சிங் பேசியதாவது -

"என்னை பொறுத்தவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக தோற்றது மிகவும் வலிக்கிறது. ஏனெனில், சொந்த மண்ணில் நாம் 0 - 3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இருக்கிறோம். அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால், ஆஸ்திரேலியாவில் நாம் இரண்டு முறை தொடரை வென்று இருக்கிறோம். எனவே, இந்த முறை தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியும்."
"ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்தது என்பது தான் எனது எண்ணம். நமது அணியில் ஜாம்பவான்களை பற்றி நாம் பேசுகிறோம். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பற்றி நாம் தவறாக பல விஷயங்களை பேசுகிறோம். ஆனால், இதற்கு முந்தைய காலத்தில் அவர்கள் என்ன சாதனைகளை செய்தார்கள் என்பதை மறந்து விட்டோம்."
"அவர்கள் இந்த காலகட்டத்தின் ஆகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்பது உண்மைதான். அவர்கள் நல்ல கிரிக்கெட்டை ஆடவில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அதனால் நம்மை விட அவர்கள் மிகவும் காயப்பட்டு இருப்பார்கள். கவுதம் கம்பீர் பயிற்சியாளராகவும், அஜித் அகர்கர் தேர்வுக் குழு தலைவராகவும், ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோரும் கிரிக்கெட்டின் சிறந்த மனதை உடையவர்கள். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு எது நல்லதோ அதை அவர்கள் செய்வார்கள்."
"என்னுடைய கருத்து என்னவெனில் வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் நாம் அவர்களைப் பற்றி எளிதாக மோசமாக பேச முடியும். ஆனால், அவர்களுக்கு ஆதரவளிப்பது என்பது கடினமான விஷயம். ஊடகத்தின் வேலை அவர்களைப் பற்றி மோசமாக பேசுவது. ஆனால், என்னுடைய வேலை எனது நண்பர்களை, சகோதரர்களை ஆதரிப்பது. என்னை பொறுத்தவரை அவர்கள் எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள்." என்றார் யுவராஜ் சிங்.