குவாலியர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மூலம் முதல் டி20 போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது புதிய மைதானம் ஆகும். எனவே, இங்கு உள்ள பிட்ச் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. இதற்கு முன் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் எல்லாம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழ்நிலையே நிலவி இருந்தது.
அதே போன்ற நிலையே குவாலியர் மைதானத்திலும் இருக்கும் என முதற்கட்ட பிட்ச் அறிக்கை குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கதேச மற்றும் இந்திய அணிகள் மோத உள்ள முதல் டி20 போட்டிக்கு கருப்பு நிற மண் கொண்ட பிட்ச் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பவுண்டரி எல்லைகள் 72 யார்டு என கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இரட்டை சதம் அடித்து இருந்தனர். அந்த அளவுக்கு அங்குள்ள பிட்ச்கள் பேட்ஸ்மன்களுக்கு சாதகமாக இருக்கும். தற்போது அமைக்கப்பட்டுள்ள கருப்பு நிற மண் பிட்ச் அதிக பவுன்ஸ் ஆகாமல் மந்தமாக இருப்பதாக தெரிகிறது. எனவே, இது பந்தை எளிதாக கணித்து ஆட பேட்ஸ்மேன்களுக்கு உதவும்.
வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் தவ்ஹீத் ஹிருதோய் இங்கு இரண்டு நாட்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட பின். இதே விஷயத்தை கூறி இருந்தார். சமீப காலத்தில், இந்த மைதானத்தில் மத்திய பிரதேச டி20 லீக் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடர் ஜூன் மாதத்தில் நடைபெற்றது.
அந்த தொடரின் முதல் இன்னிங்ஸில் சராசரியாக 161 ரன்கள் எடுக்கப்பட்டு இருந்தது. அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 278 ரன்கள் வரை ஒரு டி20 போட்டியில் குவிக்கப்பட்டு இருந்தது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்த மைதானம் நிச்சயம் பேட்ஸ்மன்களுக்கு சாதகமான மைதானமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் 200 ரன்களுக்கும் மேல் குவிக்கும் என எதிர்பார்க்கலாம். அதே சமயம், கருப்பு மண் பிட்ச்சில் மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். அதை சமாளிப்பதும் மிகவும் முக்கியமானது.