மும்பை : இந்திய வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் அமைக்கப்படுகிறது. மேலும் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற் பந்துவீச்சாளர்கள் சுலபமாக விக்கெட் எடுக்க வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிளேயிங் லெவனில் அஸ்வின் ஜடேஜா ஆகியோர் முதல் இரண்டு சுழற் பந்துவீச்சாளராக களமிறங்கி விடுவார்கள். ஆனால் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்சர் பட்டேல் துலீப் கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார்.
இந்திய டி அணிக்கு எதிராக விளையாடிய அவர் பேட்டிங்கில் முக்கிய கட்டத்தில் 86 ரன்கள் விளாசி அசத்தினார். பந்துவீச்சில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இதைப் போன்று இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஒரு விக்கெட்டை கைப்பற்றி பேட்டிங்கில் மீண்டும் 28 ரன்கள் சேர்த்தார். ஆனால் குல்தீப் யாதவ், நடந்து முடிந்த துலீப் கோப்பை தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.
குல்திப் யாதவ் பேட்டிங்கில் ஒரு ரன் மற்றும் 14 ரன்கள் தான் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்தார். ஆனால் பந்துவீச்சில் முதலில் குல்தீப் 82 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை தான் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்கள் விட்டு கொடுத்து விக்கெட் ஏதும் அவர் கைப்பற்றவில்லை. இதனால் பார்ம் படி பார்த்தால் குல்தீப்பை விட அக்சர் பட்டேல் தான் முன்னிலையில் இருக்கிறார்.
ஆனால் அக்சர் பட்டேல் போல் இடது கை சுழற் பந்துவீச்சாளராக ஜடேஜா ஏற்கனவே அணியில் இருக்கிறார். இதனால் தங்களுக்கு வித்தியாசமான பந்துவீச்சு ஆப்ஷன் வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் நினைத்தால், அக்சர் பட்டேல் உட்கார வைக்கப்பட்டு குல்தீப் யாதவுக்கு இடம் கிடைக்கலாம். ஆனால் ஃபார்ம் படி பார்த்தால் அக்சர் பட்டேல் தான் அணியில் இருக்க வேண்டும்.
மேலும் முன்பெல்லாம் இந்திய அணி அக்சர் பட்டேல் ஜடேஜா என இரண்டு ஒரே மாதிரியான பிளேயர்களை வைத்து விளையாடி இருக்கிறது. இதனால் கம்பீர் ரோகித் சர்மா கூட்டணி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.