சென்னை : இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை இன்று தொடங்குகிறது. வங்கதேச அணி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி அடுத்து இரண்டு மாதத்தில் சொந்த மண்ணில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த சூழலில் வங்கதேச அணியும் அண்மையில் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்தியா வந்து இருக்கிறது.
இந்த சூழலில் விராட் கோலி கடந்த எட்டு மாதங்களுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட திரும்பி இருக்கிறார். இதேபோன்று அதிரடி வீரர் ரிஷப் பண்ட் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறார்.
இதனால் இந்த போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும் என்று பிசிசிஐ தரப்பு கணக்கு போட்டு விட்டது. இதன் காரணமாக டிக்கெட்டின் ஆரம்ப விலை ஆயிரம் ரூபாய் என்றும் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஆன்லைனில் மட்டும் டிக்கெட் விற்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டிக்கெட் விலை வெறும் ₹200 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வங்கதேச தொடருக்கு டிக்கெட் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் யாரும் மைதானத்திற்கு வரவில்லை என்றால் அது மிகப் பெரிய தலைகுனிவை பிசிசிஐக்கு ஏற்படுத்தி விடும்.
இதனை கருத்தில் கொண்டு தற்போது இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலையை பிசிசிஐ அதிரடியாக குறைத்து இருக்கிறது. தற்போது ஆரம்பகட்ட விலையாக ஒரு நபருக்கு 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஃப்,ஜி, ஹெச் பார்வையாளர்கள் மாடத்தில் மேல் பகுதியில் 200 ரூபாய் டிக்கெட் வாங்கி பார்க்கலாம். வாலாஜா சாலையில் உள்ள 11 வது கேட் வழியாக இந்த பகுதிக்கு செல்ல வேண்டும்.
இதேபோன்று அடுத்த கட்டமாக ஐ, ஜே, கே கீழ் தளத்திலிருந்து போட்டியை பார்க்க 400 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வாலாஜா சாலையில் உள்ள கேட் 11 வழியாக இங்கு செல்ல முடியும். இதேபோன்று கலைஞர் மு கருணாநிதி பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து போட்டியை பார்க்க டிக்கெட் ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் அமைந்துள்ள கேட் ஒன்றில் இருந்து இந்தப் பகுதிக்கு செல்ல முடியும். இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் மைதானத்திற்கு நேரில் வந்து காலை ஏழு முப்பது மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம். போட்டி முடியும் வரை ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியே வரக்கூடாது.
மதிய உணவு நேர இடைவெளை, இல்லை தேநீர் இடைவேளை போது மைதானத்தை விட்டு ரசிகர்கள் வெளியேறினால் மீண்டும் புதிய டிக்கெட் வாங்கினால் மட்டுமே மைதானத்திற்குள் வர முடியும். இந்த குறைந்தபட்ச விலை டிக்கெட்டை முன்பே அறிவித்திருந்தால் பல ரசிகர்கள் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி இருப்பார்கள் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.