சென்னை : இந்தியா வங்கதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடர், உலக டெஸ்ட் சைக்கிளில் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது நல்ல உத்வேகத்துடன் இருக்கிறது.

இதனால் வங்கதேசத்தை எதிர்கொள்ள, இந்தியா கடந்த ஒரு வாரமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முகாம் இட்டு பயிற்சி செய்து வந்தது. இந்த சூழலில் சேப்பாக்கம் ஆடுகளம் எப்போதுமே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் அண்மைக்காலமாக மூன்று சுழற் பந்துவீச்சாளர் வைத்து தான் ஒவ்வொரு அணியும் விளையாடியது.
இந்த நிலையில் இன்றைய ஆடுகளத்தில் செம்மண் அதிக அளவு கலந்திருக்கிறது. மேலும் வழக்கத்திற்கு மாறாக சென்னை இன்று மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. அது மட்டுமல்லாமல் ஆடுகளத்திலும் ஈரப்பதம் அதிக அளவு இருந்தது. இதனால் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 42 ஆண்டுகளில் முதல் முறையாக டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.
இதற்கு முன்பு 1982 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்றது. ஆனால் அந்த போட்டி வெற்றி தோல்வி என்று சமனில் முடிவடைந்தது. அதன் பிறகு தொடர்ந்து 21 ஆண்டுகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதற்கு காரணம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு நாட்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். கடைசி இரண்டு நாட்களில் இங்கு பேட்டிங் செய்வது கடினம்.சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறிவிடும். இதனால் முதலில் பெரிய ஸ்கோர் அடித்து வெற்றியை பெறலாம் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு அணியும் களமிறங்கும். ஆனால் வங்கதேச அணி வானம் மேகமூட்டத்துடன் இருந்ததை கண்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர், வானம் மேகமூட்டத்துடன் இருப்பதைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். ஏனென்றால் இதுபோன்ற சூழலில் முதலில் பந்து வீசுவது நன்றாக இருப்பது போல் தோன்றும். ஆனால் மதிய நேரத்திற்கு பின்பு வெயில் கொளுத்தி எடுத்து விடும். அப்போது பந்து வீச கடினமாக மாறிவிடும். இந்த சூழலில் பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்க ஏற்ற நேரமாகும் என்று தெரிவித்திருக்கிறார். இதேபோன்று இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே சொந்த மண்ணில் விளையாடும் போது மூன்று சுழற் வந்து வீச்சாளர்களை வைத்துதான் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது.
இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பதில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறது. இதற்கு காரணம் ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்காது என்பதுதான். வங்கதேச அணியிலும் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஆடுகளத்தில் இந்தியா இந்த மாற்றத்தை செய்திருக்கிறது.