சென்னை : இந்திய வங்கதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. அடுத்து நான்கு மாதத்தில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகள் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி இருக்கிறது.
பொதுவாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து ஒவ்வொரு அணியும் விளையாடும். அது மட்டுமல்லாமல் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்கும் வகையில் களிமண்ணை ஆடுகளத்தில் கலக்க பிசிசிஐ திட்டமிட்டதாக செய்திகள் பரப்பப்பட்டன.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று ஆடுகளத்தில் செம்மண் கலக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் மைதானத்தில் ஈரப்பதமும் அதிக அளவு இருக்கிறது. இதனால் இந்தியாவும் வங்கதேசமும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார்கள்.
இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹுசைன், ஆடுகளத்தின் ஈரப்பதம் இருக்கிறது. இதனை நாங்கள் சிறப்பாக பயன்படுத்தி ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்வோம். ஆட்டத்தின் முதல் சேஷனில் வேகப்பந்துச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என நினைக்கின்றேன்.
பாகிஸ்தான் தொடரில் பெற்ற வெற்றி எங்கள் அணி வீரர்களுக்கு நிச்சயம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது. எங்கள் அணியில் அனுபவமிக்க வீரர்களும் திறமை வாய்ந்த இளைஞர்களும் கலந்து இருக்கிறார்கள். பாகிஸ்தான் போட்டியில் விளையாடியது போல் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட இருக்கின்றோம்.
இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் நாங்கள் டாஸ் வென்று இருந்தால் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். தற்போது கள சூழல் கடும் சவால்களை கொடுக்கும் என நினைக்கின்றேன். இந்த சவால்களை சந்திக்கும் வகையில் நாங்கள் ஏற்கனவே தயாராக இருக்கின்றோம். அடுத்த நான்கு மாதங்களில் நாங்கள் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கின்றோம்.
ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனினும் தற்போது எங்களுடைய முழு கவனமெல்லாம் சென்னை டெஸ்ட் போட்டியில் தான் இருக்கின்றது. சென்னைக்கு நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே வந்து நல்ல பயிற்சியை செய்து இருக்கின்றோம். இங்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை அனைத்துமே செய்து விட்டோம். நாங்களும் மூன்று வேகபந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறோம்.
ஆகாஷ் தீப், பும்ரா, சிராஜ் 3 வேக பந்துவீச்சாளராக களமிறங்குகிறார்கள் சுழற் பந்து வீச்சாளராக அஸ்வின்,ஜடேஜா இருக்கிறார்கள் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இந்தியா பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மான் கில்,விராட் கோலி, கே எல் ராகுல்,ரிஷப் பந்த், ஜடேஜா,அஸ்வின், பும்ரா,ஆகாஷ் தீப், முகமது சிராஜ். இந்த நிலையில் 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஷேசனை மட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்கு பிடித்துவிட்டால் ரன்கள் குவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.