கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தில் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. காலை 9.30 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி நீண்ட நேரம் ஆகியும் துவங்கவில்லை. மூன்றாம் நாள் அன்று மழை பெய்யாத போதும் மோசமான ஆடுகளம் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அம்பயர்கள் 10 மணிக்கு ஆடுகளத்தை பரிசோதித்தனர். அதில் திருப்தி ஏற்படாததால் மீண்டும் நண்பகல் 12 மணிக்கு பரிசோதிக்க முடிவு செய்தனர். அப்போதும் ஆடுகளத்தில் சில இடங்களில் மழை நீர் தேங்கி மோசமான நிலையில் இருந்ததால் மீண்டும் மதியம் 2 மணிக்கு பரிசோதனை நடத்தப்படும் என அறிவித்தனர். அப்போதும் ஆடுகளத்தில் சில பகுதிகள் ஈரமாக இருந்ததால் மூன்றாம் நாள் ஆட்டத்தை கை விடுவதாக அறிவித்தனர்.
ஏற்கனவே, முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டம் முற்றிலுமாக மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது நாளும் முந்தைய தினம் இரவு பெய்த மழையால் போட்டி பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டு இருக்கிறது. அதனால் கான்பூர் மைதானத்தின் மழைநீர் வடிகால் குறித்த விமர்சனம் எழுந்துள்ளது.

நேற்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் ஆடுகளம் பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டு இருந்தது. அந்த உறைகளின் மீது அதிக அளவு மழை நீர் தேங்கியது. எனவே, முதலில் உறைகளின் மேல் இருக்கும் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்றது. ஆடுகளத்தின் சில பகுதிகளில் நீர் தேங்கியது. அதையும் நீக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால், அம்பயர்களுக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை.
மூன்றாவது நாள் அன்று மழை பெய்யாத போதும் ஆடுகளத்தின் மோசமான நிலையால் அம்பயர்கள் போட்டியை நடத்த அனுமதிக்கவில்லை. முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் நாளில் 35 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதன் பின் மழையால் மூன்றாவது நாள் ஆட்டம் வரை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து இந்தப் போட்டி டிரா ஆகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.