கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் துவங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா ஆடுகளம் மிருதுவாக இருப்பதால் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த உள்ளதாக அறிவித்தார்.
இந்த போட்டியின் இடையே மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது நிலையில் இந்தியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய 11 வீரர்கள் இந்த போட்டியிலும் களமிறங்க உள்ளனர்.

முன்னதாக மூன்றாவது சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை ஆட வைக்க வேண்டும் என்ற கருத்து முன்னாள் வீரர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள 11 பேர் கொண்ட இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் நாகித் மற்றும் டஸ்கின் அகமது நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பதிலாக கலீத் அகமது மற்றும் தாய்ஜுல் இஸ்லாம் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள 11 பேர் கொண்ட வங்கதேச அணி:
ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தாய்ஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது
இந்த போட்டிக்கு கருப்பு நிற மண் கொண்ட பிட்ச் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிட்ச்சில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்காது என கூறப்படும் நிலையில், இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.