கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் வரும் செப்டம்பர் 27 அன்று துவங்க உள்ளது. அந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களிலும் பெரிய அளவில் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. மூன்றாவது நாளிலும் லேசான மழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

அந்த போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. ஆல் ரவுண்டர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா பின் வரிசையில் அபாரமாக ஆடி இந்திய அணியை மீட்டனர். ஜடேஜா 86 ரன்களும், அஸ்வின் 113 ரன்களும் சேர்த்து இருந்தனர்.
அதன் பின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் சதம் அடித்திருந்தனர். அதனால் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், வானிலை அறிக்கையில் மழை பெய்யும் என கூறப்பட்டு இருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், மழையால் பிட்ச் பாதிக்கப்பட்டால் அதனால் போட்டியில் மாற்றங்கள் ஏற்பட்டு இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தற்போது வெளியாகி உள்ள வானிலை அறிக்கையில் போட்டிக்கு முந்தைய நாளான செப்டம்பர் 26 அன்று 79 சதவீதம் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
போட்டியின் முதல் நாளான செப்டம்பர் 27 அன்று 92 சதவீதம் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், முதல் நாள் ஆட்டத்தில் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் போகலாம் என்ற சந்தேகம் உள்ளது. இரண்டாவது நாள் அன்று 80 சதவீதமும், மூன்றாவது நாளன்று 59 சதவீதமும் மழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதனால் முதல் இரண்டு நாட்களில் போட்டி நடப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மூன்றாவது நாளிலும் மழையால் போட்டியின் ஒரு பகுதி பாதிக்கப்படலாம். நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் அன்று முற்றிலுமாக மழை பொழிவு இருக்காது என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு நாட்களிலும் போட்டி முழுமையாக நடைபெறும். இதில் மற்றொரு சிக்கலும் உள்ளது. மழையால் அவுட்ஃபீல்டு பகுதிகளில் சேதம் ஏற்பட்டால் அதனால் போட்டி நடக்க தாமதமாகலாம்.