கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்திற்கான வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். ஏற்கனவே முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதியுடன் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே மழை பெய்ய தொடங்கியது.

இதனால் மைதானம் முழுக்க தார்பாய் கொண்டு மூடப்பட்டது. இந்த மழை கொஞ்சம் கொஞ்சமாக கனமழையாக மாறிய போது, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வது முக்கியமானதாகும்.
இதனால் அடுத்த 4 நாட்கள் மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் 2வது நாளுக்கான வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை தகவலின்படி, 80 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் முதல் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும். ஏனென்றால் ஹோம் சீசனில் இந்திய அணி இன்னும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது.
இந்த 4 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இருக்கும். அதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமே இந்திய அணிக்கு உள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி வெல்லுமா என்பது சந்தேகம் என்றே சொல்லப்படுகிறது.
இதனால் சொந்த மண்ணில் அனைத்து போட்டிகளையும் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த மழை தொடர்ந்து பெய்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும். இதனால் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படும் போதே, கேப்டன் ரோஹித் சர்மா ஏமாற்றமடைந்தது இதற்கு தானோ என்று சந்தேகமும் எழுந்தது.