சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இன்னும் நான்கு டெஸ்ட்களில் இந்தியா வெற்றி பெற்றால் போதும்.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் அணியில் அனைத்தும் சரியாக நடந்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த போட்டியில் இந்திய அணி செய்த தவறுகளை தற்போது பார்க்கலாம். இந்திய அணிக்கு தற்போது இருக்கும் பெரிய தர்ம சங்கடமே கேப்டன் ரோகித் சர்மா தடுமாறுவதுதான்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் ஆறு ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து ரன்களும் மட்டுமே எடுத்தார். அதுவும் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த இரண்டுமே ஒரு வேகப்பந்துவீச்சாளரிடம் தான். சேப்பாக்கம் ஆடுதளத்திலேயே ரோகித் சர்மா இவ்வாறு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தால், ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் பாட் கம்மின்ஸ் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது நிச்சயமாக தடுமாற்றம் தான் தொடரும்.
இதனால் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினாலே இந்தியாவின் பேட்டிங்கில் பாதி சிக்கல் தீர்ந்துவிடும். இதனால்,ரோகித் சர்மா தன்னுடைய பார்மை மீட்க வேண்டிய நிலையில் இருக்கின்றார். இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய இரண்டாவது பிரச்சனையே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறுவது தான்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 ரன்கள் எடுத்த விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழ்ந்தார். விராட் கோலி முதல் இன்னிங்ஸில் வேக பந்துவீச்சாளரிடம் ஆட்டம் இழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் சுழற் பந்துவீச்சாளரிடம் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இந்திய அணியின் பேட்டிங்கின் முக்கிய தூணாக விராட் கோலி இருக்கிறார்.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை விராட் கோலி தன்னுடைய பழைய பார்மை மீட்க முடியவில்லை. ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்தங்கி விட்டார். இதனால் ஜோ ரூட், வில்லியம்சன் போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சதம் சதமாக விளாசி வருகின்றனர். இதனால் விராட் கோலி தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே ஆஸ்திரேலியா போன்ற மணங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும்.
தற்போது ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் விராட் கோலி தன்னுடைய அனுபவத்தை வெளி காட்ட வேண்டும். இந்திய அணியில் இருக்கும் மூன்றாவது பிரச்சனை நடு வரிசையில் ஃபார்மில் இல்லாத வீரர்கள் இருப்பது தான். மேலே சொன்னது போல் புஜாரா போன்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று பிறந்த வீரர்கள் தற்போது இல்லை.
இதனால் நடுவரிசையில் கே எல் ராகுல் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஆக வேண்டும். இல்லையென்றால் இந்திய அணி சர்பிராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்களை இந்த இடத்திற்கு பயன்படுத்திப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் ஆஸ்திரேலிய தொடரில் மிதி வாங்குவது உறுதி.