ஐதராபாத்: இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வந்த சஞ்சு சாம்சன், ஒரு வழியாக மாஸ் இன்னிங்ஸை வெளிக் காட்டியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி சஞ்சு சாம்சன் சதம் விளாசியது அவருக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
ஏனென்றால் 2015ஆம் ஆண்டிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன், இதுவரை பேக் அப் வீரராக மட்டுமே இருந்து வருகிறார். தற்போது கூட சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் வைத்திருப்பதால் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிரந்தமான பேட்டிங் வரிசை கூட சஞ்சு சாம்சனுக்கு ஒதுக்கப்பட்டதில்லை.

ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு பேட்டிங் வரிசையில் களமிறங்கி விளையாடி வந்தார். அதேபோல் சில நேரங்களில் இந்திய அணியில் இடம்பிடிக்க கிடைத்த வாய்ப்புகளையும் சஞ்சு சாம்சன் கோட்டைவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கு கிடைத்ததை போல், அவருக்கு தேர்வுக் குழு அல்லது பயிற்சியாளர்கள் ஆதரவு இருந்ததில்லை.
இதனால் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் கூட வாய்ப்பு கிடைத்ததில்லை. இந்த நிலையில் வங்கதேச டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டது குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், வங்கதேச டி20 தொடர் தொடங்குவதற்கு 3 வாரங்களுக்கு முன்பாக எனக்கு ஒரு அழைப்பு வந்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உள்ளிட்டோர் பேசினார்கள்.
அதில் வங்கதேச டி20 தொடரில் நீ தான் தொடக்க வீரராக களமிறங்கப் போகிறாய் என்று தெளிவாக கூறிவிட்டனர். அந்த ஒரு போன் கால், நான் தயாராவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. கேரளாவில் இருந்து நேரடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அகாடமிக்கு சென்று, தொடர்ச்சியாக புதிய பந்துகளில் பயிற்சியை மேற்கொண்டேன்.
அது வங்கதேச டி20 தொடரில் புதிய பந்துகளை எதிர்கொள்வதற்கு உதவியாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். வங்கதேச டி20 தொடருக்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அகாடமியில் சஞ்சு சாம்சன் பயிற்சியில் ஈடுபட்ட போது, அங்கு தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் உடனிருந்தார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகின.
இதன் மூலமாக சஞ்சு சாம்சன் இந்திய அணியின் தொடக்க வீரருக்கான இடத்தை நிரப்ப முடியும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளது. இதனால் அந்த நேரத்தில் இந்திய அணி விளையாடும் டி20 தொடர்களில் சஞ்சு சாம்சன் தான் முதன்மை விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரராக இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.