ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வங்கதேச அணி முதலில் பவுலிங் செய்ய உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் ஒரே ஒரு அனுபவ வேகப் வேகப் பந்துவீச்சாளராக இருந்த அர்ஷ்தீப் சிங் இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் முழு நேர வேகப் பந்துவீச்சாளராக மயங்க் யாதவ் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்றார். அவர் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடியவர். இதன் மூலம் முழு நேர வேகப் பந்துவீச்சாளராக அனுபவம் இல்லாத ஒரு வீரரை மட்டும் வைத்துக் கொண்டு இந்திய அணி இந்த போட்டியில் விளையாடுகிறது.

ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் பகுதி நேர வேகப் பந்துவீச்சாளர்களாக செயல்படுவார்கள். மேலும், இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கி உள்ளது. வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரும் இந்தப் போட்டியில் பங்கேற்று இருக்கிறார்கள். ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த தொடரில் இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.
மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3 - 0 என மொத்தமாக கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வங்கதேச அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடுமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
3வது டி20 போட்டியில் களமிறங்கிய இந்திய அணி :
சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ்
3வது டி20 போட்டியில் களமிறங்கிய வங்கதேச அணி :
பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிதோய், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன்