ஹைதராபாத்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. நேற்று அந்த மைதானம் இருந்த பகுதிகளில் கடுமையான மழை பெய்து உள்ளது. அதனால் போட்டி நடைபெற உள்ள சனிக்கிழமை அன்றும் மழை பெய்யுமா? என்ற சந்தேகம் உள்ளது.
போட்டி நாள் அன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், போட்டி நேரத்தின் போது மழை பெய்ய குறைவான வாய்ப்பே உள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு தான் துவங்க உள்ளது. அந்த நேரத்திற்கு பின் மழை பெய்ய அதிக வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே, 40 ஓவர்களும் போட்டி முழுமையாக நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.

இடையே மழை பெய்தாலும் அது சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் நிச்சயமாக போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கலாம். அதே சமயம், போட்டிக்கு முன் பெய்யும் மழையால் மைதானத்தின் அவுட் ஃபீல்டு பகுதி பாதிப்படையாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் அம்பயர்கள் ஆடுகளத்தை சோதனை செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதனால், போட்டி தடைபட வாய்ப்பு உள்ளது.
இந்த டி20 தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்த இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அடுத்து மூன்றாவது மற்றும் கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று வங்கதேச அணியை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், மூன்றாவது போட்டியின் போது வெளியே அமர வைக்கப்பட்டு இருக்கும் மாற்று வீரர்களில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. வேகப் பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் அல்லது மயங்க் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வெளியே அமர வைக்கப்பட்டிருக்கும் ஹர்ஷித் ரானாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கதேச அணியை பொறுத்தவரை ஒரு ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது. ஏற்கனவே, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக 0 - 2 என அந்த அணி தோல்வி அடைந்து இருக்கிறது. தற்போது டி20 தொடரையும் முழுமையாக இழந்தால் அந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக மாறும். எனவே, இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற கடுமையாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கலாம்.