பெங்களூர்: இந்தியா சி அணிக்கு எதிரான துலீப் டிராபி போட்டியில் இந்தியா பி அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி விக்கெட் வரை ஆட்டமிழக்காமல் இருந்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. சிறப்பாக ஆடிய அபிமன்யூ ஈஸ்வரன் 286 பந்துகளில் ஒரு சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 157 ரன்களை விளாசி இருக்கிறார்.
கடந்த முறை இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் கேஎல் ராகுல் தான் கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது இந்திய அணியின் பேக் அப் தொடக்க வீரராக இளம் வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டிருந்தார். பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதன்பின் அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்ட ஏராளமான சீனியர் வீரர்கள் விலகிய போதும், அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருந்தாலும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அபிமன்யூ ஈஸ்வரன் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணியின் கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டிருந்தார். முதல் போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்த நிலையில் இந்தியா சி அணிக்கு ஆட்டத்தில் இந்தியா பி அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா சி அணி முதல் இன்னிங்ஸில் 525 ரன்களை விளாசியது. இதன்பின் இந்தியா பி அணி தரப்பில் அபிமன்யூ ஈஸ்வரன் - ஜெகதீசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஜெகதீசன் 137 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நின்றிருந்த அபிமன்யூ ஈஸ்வரன் நிதானமாக விளையாடி சதத்தை எட்டினார். சிறப்பாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இதனால் இந்தியா பி அணி 332 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிமன்யூ ஈஸ்வரன் 286 பந்துகளில் ஒரு சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 157 ரன்கள் குவித்தார்.
இதன் மூலமாக அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய தேர்வுக் குழுவின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் மோசமாக விளையாடும் வீரர், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நீக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக டாப் ஆர்டர் வீரரான அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது.