துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக 74 ரன்கள் அடித்த நிலையில் தற்போது வங்கதேசத்துக்கு எதிராக 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதன் மூலம் மீண்டும் ஆட்டநாயகன் விருதை அவர் வென்றுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் என்னுடைய பணியை தான் செய்கின்றேன். நான் முன்பே சொல்வது போல் பேட்டிங் செய்யும்போது பெரியதாக நான் எதுவும் யோசிக்க மாட்டேன்.

ஆட்டத்தின் ஓட்டத்தோடு நானும் செல்வேன். பந்து நான் அடிக்கும் ரேஞ்சில் இருந்தால் நிச்சயம் அதை முதல் பந்தாக இருந்தால் கூட நான் அடித்து விடுவேன். பவர் பிளேவில் அதிக அளவு ரன்கள் சேர்க்க வேண்டும். அதுதான் என்னுடைய குறிக்கோள். சில போட்டிகளில் முதல் பந்திலே அடித்து ஆட வேண்டும் என்று நினைப்பேன்.
ஏனென்றால் சில பவுலர்கள் எப்படி முதல் பந்திலேயே விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்களோ அதுபோல்தான் நானும் அடித்து ஆட வேண்டும் என்று நினைப்பேன். இன்று அமைக்கப்பட்ட ஆடுகளம் புதிதாக இருந்தது. இதனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நான் சோதிக்க முயற்சி செய்தேன். பந்து ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதனால் நானும், கில்லும் முதல் சில பந்துகளை பொறுத்திருந்து விளையாடுவோம்.
அதன் பிறகு அடித்து ஆடுவோம் என நினைத்தோம். பில்டிங்கில் எதிரணி வீரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்து தான் என்னுடைய ஷார்ட் தேர்வை நான் செய்வேன். நான் கண்மூடித்தனமாக என்னுடைய பேட்டை சுற்றுவது கிடையாது. இதற்காக நான் வலை பயிற்சியில் அதிக அளவு பேட்டிங் செய்வேன். வலைப்பயிற்சியில்தான் ஒரு பேட்ஸ்மேனால் முன்னேற முடியும்.
நான் ஒரு திட்டம் தீட்டினால் அதற்கு ஏற்ற வகையில் வலைப்பயிற்சியை மேற்கொள்வேன். பயிற்சியில் கூட தொடர்ந்து அதிக சாட்களை ஆட முயற்சி செய்தால், நாம் போட்டியில் ஆட்டம் இழக்க நேரிடும். எனவே என்னுடைய மனதில் எப்போதுமே தேவையில்லாத ஷாட்கள் ஆடி விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்று நினைப்பு இருக்கும்.