குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆகி இருந்தார். அதற்கு காரணம் சஞ்சு சாம்சன் தான் என அபிஷேக் சர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். ஆனால், உண்மையில் அபிஷேக் சர்மா மீது தான் தவறு என்பதால் சஞ்சு சாம்சன் ரசிகர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் அபிஷேக் சர்மா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி துவக்க வீரராக இருக்கிறார். சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். அதனால், அந்த இரண்டு ஐபிஎல் அணிகளின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இந்த ரன் அவுட்டில் யார் செய்தது தவறு? என மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது முதல் இரண்டு ஓவர்களில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியாக ரன் சேர்த்தனர். இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை சஞ்சு சாம்சன் சந்தித்தார். அவர் பந்தை ஷார்ட் மிட் விக்கெட் திசையில் அடித்தார். அப்போது அபிஷேக் சர்மா பந்து ஃபீல்டரிடம் சிக்கியதை பார்க்காமல் சில அடி தூரம் ஓடிவிட்டார்.
அவர் ஓடி வருவதை பார்த்த சஞ்சு சாம்சன் இரண்டு அடி எடுத்து வைத்து ரன் ஓடத் தயார் ஆனார். ஆனால், ஃபீல்டர் பந்தை பிடித்து விட்டதை பார்த்த சஞ்சு சாம்சன் ரன் ஓட வேண்டாம் என அபிஷேக் சர்மாவை திருப்பி அனுப்பினார். ஆனால், அபிஷேக் சர்மா நீண்ட தூரம் ஓடி பந்து விட்டதால் திரும்பி ஓட முடியாமல் ரன் அவுட் செய்யப்பட்டார். வங்கதேச வீரர் தவ்ஹித் ஹிருதோய் பந்தை நேராக ஸ்டம்புக்கு வீசி டைரக்ட் ஹிட் முறையில் ரன் அவுட் செய்தார்.
அபிஷேக் சர்மா இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். அவர் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து இருந்தார். இந்த சம்பவத்துக்கு பின்னர் சமூக வலைதளத்தில் சஞ்சு சாம்சனுக்கு எதிராகவும், அபிஷேக் சர்மாவுக்கு எதிராகவும் ரசிகர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்கள் மட்டும் எடுத்தது. அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி அதிரடியாக ரன் சேர்த்து 11.5 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 29 ரன்களும், நிதிஷ் குமார் 15 பந்துகளில் 16 ரன்களும், ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 39 ரன்களும் சேர்த்தனர்.