குவாலியர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இரண்டு வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். கடந்த 2016 ஜனவரி மாதம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் ஒரே நேரத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகி இருந்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அதன் பின் இப்போதுதான் இந்திய டி20 அணியில் 23 வயதிற்கு கீழ் உள்ள இரண்டு வீரர்கள் ஒரே நேரத்தில் இந்திய டி20 அணியில் அறிமுகம் ஆகின்றனர். இதில் மற்றொரு ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமையும் உள்ளது. பும்ரா வேகப்பந்துவீச்சாளராகவும், ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீசும் ஆல் ரவுண்டராகவும் அறிமுகம் ஆன நிலையில், அதே போல தற்போது மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியில் அறிமுகம் ஆகி உள்ளனர்.

இதில் பும்ராவை போலவே மயங்க் யாதவ் வேகப் பந்துவீச்சாளர் ஆவார். ஹர்திக் பாண்டியாவை போல நிதிஷ் குமார் ரெட்டி வேகப்பந்து வீசும் ஆல் ரவுண்டர் ஆவார். மயங்க் யாதவ் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் உடையவராக இருப்பதால் அவர் அடுத்த பும்ராவாக மாறுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பும்ரா தனக்கென தனி பந்துவீசும் முறையை கையாள்கிறார். அதே போல, மயங்க் யாதவ் தொடர்ந்து அதிவேகத்தில் பந்து வீசும் ஆற்றல் உடையவராக இருப்பதால்
அதேபோல ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவருக்கு மாற்றாக ஒரு வேகப்பந்து வீசும் ஆல் ரவுண்டரை இந்திய அணி தேடி வருகிறது. அந்த இடத்தை நிதிஷ் குமார் ரெட்டி நிரப்புவாரா? என்ற பரிசோதனை முயற்சியகவே அவர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறார். அதாவது 8 ஆண்டுகளுக்கு பின் அடுத்த பும்ரா மற்றும் அடுத்த ஹர்திக் பாண்டியாவுக்கான தேடல் முயற்சியாகவே மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியில் வாய்ப்பு பெற்று இருக்கின்றனர்.
இவர்கள் இருவரில் மயங்க் யாதவ் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஒரு மெய்டன் ஓவரும் வீசி இருந்தார். நிதிஷ் குமார் 2 ஓவர்கள் பந்து வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். மேலும், ஒரு கேட்ச் வாய்ப்பையும் நழுவ விட்டார்.