கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸ் அடித்திருந்தார். அதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான சம்பவம் சொல்லப்படுகிறது. விராட் கோலியிடம் அவர் பேட்டை வாங்கி அதிரடியாக சிக்ஸ் அடித்து இருந்தார். அதை கோலியாலேயே நம்ப முடியவில்லை.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் மூன்று நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நான்காவது நாள் அன்று வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது.

அப்போது அதிரடியாக ரன் சேர்க்க வேண்டும் என முடிவு எடுத்த இந்திய அணி ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் என்று விகிதத்தில் ரன் சேர்த்து வங்கதேச அணி எடுத்த ஸ்கோரை தாண்டி முன்னிலை பெற்றது. பின்னர் விக்கெட்கள் வேகமாக சரிந்தன. அப்போது ஒன்பதாவது வரிசையில் ஆகாஷ் தீப் களம் இறங்கினார். அவர் விராட் கோலியின் பேட்டை கடன் வாங்கிக் கொண்டு பேட்டிங் செய்ய வந்தார்.
யாரும் எதிர்பாராத வகையில் அவர் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார். முன்னதாக இந்திய டி20 அணியின் அதிரடி மன்னன் ரிங்கு சிங், கோலியின் பேட்டை வாங்கித் தான் போட்டிகளில் அதிரடியாக ரன் சேர்த்து வந்தார். விராட் கோலி முதலில் கொடுத்த பேட் உடைந்து விட்டதால், மீண்டும் அவரிடமே சென்று இரண்டாவது பேட்டை வாங்கி ஆடி வருகிறார் ரிங்கு சிங்.
அதே போல, ஆகாஷ் தீப் பின்வரிசை வீரராக இருந்தாலும் அதிரடியாக ஆட வேண்டிய சூழ்நிலையில் கோலியின் பேட்டை வாங்கிக் கொண்டு வந்து இரண்டு சிக்ஸர்களை அடித்து இந்திய அணி அதிக முன்னிலை பெற உதவினார். விராட் கோலி பேட்டில் என்ன மேஜிக் இருக்கிறது? என்பது தெரியவில்லை. அவரது பேட்டை வாங்கி செல்லும் இளம் வீரர்கள் அனைவரும் அதிரடியாக சிக்ஸர்கள் அடிக்கிறார்கள். ஆகாஷ்தீப் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்த போது விராட் கோலி அதை நம்ப முடியாமல் வியந்து பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். ஆகாஷ் தீப் அந்த இரண்டு சிக்ஸர்களை அடித்த பின் மூன்றாவது சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால், பவுண்டரி எல்லையில் அது கேட்ச் பிடிக்கப்பட்டது.