பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா சி அணிக்காக ஆடிய அன்சுல் கம்போஜ் தனி பவுலராக போராடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். பிட்சில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாலும், பேட்ஸ்மேன்களின் வீக்னஸை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்தி சம்பவம் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மும்பை அணியின் பிளேயிங் லெவனில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. ஏனென்றால் பல கட்ட சோதனைகளுக்கு பின்னரே அவரை ஏலத்தில் வாங்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்யும். அதன்பின் பயிற்சியின் போது அந்த வீரரின் செயல்பாடுகள் மற்றும் தேவைக்கேற்பவே பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்படும்.

மும்பை அணிக்காக ஒரு சீசனில் முழுமையாக விளையாடி விட்டாலே அந்த வீரர் அடுத்தக் கட்டமாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் கடந்த சீசனில் மும்பை அணிக்காக இளம் வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் அறிமுகம் செய்யப்பட்டார். ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதான அன்சுல் கம்போஜ், மும்பை அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அறிமுகப் போட்டியிலேயே பலரின் கவனத்தை ஈர்த்த அன்சுல் கம்போஜ், எளிதாக 140 கிமீ வேகத்தில் பவுலிங் செய்து அசத்தினார். இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அன்சுல் கம்போஜ் முதல் போட்டியிலேயே வாய்ப்பை பெற்றார்.
இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், மீண்டும் 2வது சுற்றில் இந்தியா பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கினார். இதில் முதல் பேட்டிங் செய்த இந்தியா சி அணி 525 ரன்கள் விளாசி ஆல் அவுட்டாகியது. கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த அன்சுல் கம்போஜ் 27 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். இதன்பின் இந்தியா டி அணி பேட்டிங்கை தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் 525 ரன்கள் விளாசப்பட்ட போதே பவுலர்களுக்கு பிட்சில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று தெரிய வந்தது. ஆனால் இந்தியா சி அணியின் இளம் வீரரான அன்சுல் கம்போஜ் அசத்தலாக பவுலிங் செய்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜெகதீசனை 70 ரன்களில் வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின் முஷீர் கான், சர்ஃபராஸ் கான், ரிங்கு சிங், நிதிஷ் ரெட்டி ஆகிய நட்சத்திர வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார். மற்ற பவுலர்கள் அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், தனியாளாக விக்கெட் வீழ்த்தியது அன்சுல் கம்போக் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்தியா ஏ அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே இந்திய யு19 அணிக்காக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.